திங்கள், 10 செப்டம்பர், 2012

அட்லஸ் (சிறுகதை)

ஒளியுமிழும் அந்தச் சிறிய கருங்கல் என்னருகே விழுந்தபோது, நான், " பைந்தமிழ் இலக்கணம் ஐவகைப் படும்.அவையாவன: எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம் மற்றும் அணியிலக்கணம்" என்று சத்தமாய் மனனம் செய்து கொண்டிருந்தேன். படிப்பதிலிருந்து ஒரு விடுதலையை எதிர்பார்த்துக் கிடந்த எனக்கு, அந்தக் கல் சட்டென்று ஒரு அக மலர்ச்சியை ஏற்படுத்தியது. கைநீட்டி அந்தக் கல்லை எடுத்து ஆராய்ந்தேன்.
எந்த தேவதூதன் எனக்காக அந்தக் கல்லை எறிந்தானோ? படிப்பதைத் தவிர எந்தக் காரியமாய் இருந்தாலும் தாராளமாகச் செய் என்று மனம் வேகமாக கட்டளையிட்டது.அச்சிறிய கருங்கல் ஈரமாய் இருந்தது. கல்லின் குளிர்ச்சி வேகமாய் என் விரல்களில் பரவியது. உள்ளங்கையில் வைத்து அந்தக் கல்லை மெதுவாக உருட்டிப் பார்த்தேன். என்னுடைய சிவந்த உள்ளங்கைகளுக்கு அந்தக் கருங்கல் ஒரு சோபிதத்தை அளிப்பதை உணர முடிந்தது.
அந்த அழகிய கல்லிலிருந்து என் பார்வையை விலக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது இன்னொரு கல்லொன்று இம்முறை என் மடியில் வைத்திருந்த தமிழ் புத்தகத்தில் விழுந்தது. சட்டென்று வெளியுலக போதமடைந்து என்னைச் சுற்றிப் பார்த்தேன்.
பக்கத்தில் இருந்த பாக்கு மரத்தினடியில் அமர்ந்திருந்த திலீபன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான். அவன் கையில் என்மேல் எறிவதற்குத் தயாராய் இன்னொரு கல்லும் இருந்தது.
என்னடா? என்றேன்.
என்னா நொன்னாடா? எம்புட்டு நேரமாடா ஒன்னியக் கூப்புட்டுக்கிட்டுருக்கேன்?
சரி சொல்லு. சார் பாத்துரப் போறாரு.
நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சக்திவேல் சாருக்கு வெறி வந்து விடும். திசைகளைக் கடந்து வரும் காற்று போல கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கள் முன் தோன்றி விடும் சுபாவம் கொண்டவர். எங்களிடம் அவர் பேசுவது தன் கையில் இருக்கும் மணிப் பிரம்பின் மூலமாகத்தான். ஒளி மிகுந்த தன்னுடைய உடைவாளால் ஒரு "சாமுராய்" வீரன் தன் எதிரிகளை லாவகமாக வீழ்த்துவது போல சக்திவேல் சார் தன் மணிப்பிரம்பைச் சுழற்றி எங்களை வீறு வீறென்று வீறி விடுவார்.
முடிவின்றி வீசும் சாயங்காலக் காற்றுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவராய், மைதானத்து மணலில் 'சேர்' போட்டு அமர்ந்திருந்த சக்திவேல் சாரை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டே மெல்லிய குரலில் திலீபன் சொன்னான்.
'அட்லஸ்' வந்திருகார்ரா!
‘அட்லஸ்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் என் புலன்கள் பொங்கின.
'எங்கடா? என்றேன் ஆவேசமாய். ஒளியின் வேகத்தில் விழிகள் பள்ளி மைதானத்தை வட்டமிட்டுத் திரும்பின.
வராண்டாவுல நடந்து வர்றாப்ள. சீக்கிரம் பாரு. அவசரப் படுத்தினான் திலீபன்.
எங்களுக்கு சற்று தொலைவில் அமர்ந்து மணல்பரப்பை கைகளால் அளைந்து கொண்டே படித்துக் (பேசிக்) கொண்டிருந்த சரவணன், நரேன், விஜயகுமார், சதாசிவம் என யாவரின் விழிகளும் வராண்டாவை நோக்கி மலர்வதைப் பார்த்துக் கொண்டே என் விழிகளும் வராண்டாவில் விழுந்தன.
ஆம். கையில் போர்வாள் இல்லாத ஒரு "க்ளேடியேட்டர்" போல வராண்டாவில் விரைந்து வந்து கொண்டிருந்தார் அட்லஸ். ஆறடியைத் தாண்டும் ஆகிருதியுடன் தன்  முரட்டு உடலின் ஒவ்வொரு அசைவும் வீரத்தை எதிரொலிக்க "அட்லஸ்", சக்திவேல் சாரைப் பார்த்து வந்து கொண்டிருந்தார்.
"அட்லஸ்" என்று எங்கள் அனைவராலும் பெருமிதத்தோடு அழைக்கப் படுபவர் வேறு யாருமல்ல. எங்கள் வகுப்பில் படிக்கும் கண்ணனின் அப்பாதான்.  'முத்தையா' என்பது அவருடைய பெயர். ஆனால், எங்களுக்கே உரிய உலகில் அவருக்கு நாங்கள் இட்ட பெயர் ‘அட்லஸ்’. இந்தப் பெயர் எங்கள் வகுப்புப் பையன்களுக்கு மட்டுமே தெரிந்த பெயர். பொம்பளப் பிள்ளைகளுக்குத் தெரியாது. ஒரு பாக்கெட் கடலை முட்டாயி வாங்கித் தந்தாலும் அவளுகளுக்கு சொல்லிரக் கூடாதுரா! என்று எங்களுக்குள் ரகசியப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தோம்.
பெயர்க் காரணம் ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. சங்கதி இதுதான். எங்கள் பதினான்கு வயதில் அதுவரை நாங்கள் யாருமே அவரைப் போன்ற ஒரு பலசாலியை இந்தப் பாரின்மிசைப் பார்த்ததில்லை. கரிய பேருருவம். உயரம் என்றால் அப்படி ஒரு உயரம். என்னையும் விஜயகுமாரையும் ஒருவரின் மேல் மற்றொருவர் நிற்கும்படிச் செய்தால் அவருடைய தோளை எட்ட முடியும். இரும்பை உருக்கி வார்த்தது போன்ற தோள்கள். இரு பாறாங்கற்களைச் செதுக்கிப் பொருத்தியது போன்ற மார்பு. கரடு முரடான கைகள். கையை மடக்கி பலம் காட்டத் துவங்கினால் அவருக்குப் பின்னால் அதுவரைத் தெரிந்து கொண்டிருந்த நிலக் காட்சி மறையும். ஆறு பாயக் கூடிய அகன்ற முதுகு. எங்களூர்ப் பெருமாள் கோயிலின் முகப்புச் சுவரில் வரைந்து வைத்த அனுமாரின் தொடைகளைப் போன்ற தொடைகள். எங்கள் தமிழ் டீச்சர் "வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே" என்ற செய்யுளைச் சொல்லித் தருகையில் எங்கள் அனைவரின் கற்பனையிலும் ஒரே நேரத்தில் தோன்றுபவர். 
அட்லஸோட பைசெப்ஸ் இருபது இன்ச்சுடா! என்று சரவணன் சொன்ன போது எங்கள் வகுப்பினில் எவரும் மறுத்துப் பேசவில்லை.
சரவணன் ஒரு விஷயம் சொன்னால் அது உண்மையாய்த்தான் இருக்கும். முதல் ரேங்க் வாங்குகிறவன்  என்பதால் எப்போதும் அவனது வார்த்தைக்கு நாங்கள் மறுப்பு சொல்வதேயில்லை.
பிரசன்னா மட்டும் கேட்டான், "ஹீமேனை" விடவா?
ஹீமேன் என்னடா ஹீமேன். ஹல்க் ஹோகனை** விட பெரிய பைசெப்ஸ்டா அட்லஸுக்கு.
நாங்கள் அனைவரும் அதனை நம்பத் துவங்கி இருந்தோம்.
திலீபன்தான் கண்ணனின் அப்பாவுக்கு 'அட்லஸ்' என்று பெயர் வருவதற்குப் 'பிள்ளையார் சுழி' போட்டவன். அதுவரை நாங்கள் அதிகம் கேட்டிருக்காத பெயர். ஊரிலேயே அதிபலசாலியான அவருக்கு என்ன பெயர் வைப்பது என்று ஒரு மதிய உணவு இடைவேளையில் காலியாகக் கிடந்த பெஞ்சுகளில் அமர்ந்து யாவரும் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தெரிந்த பெயரைச் சொல்ல வேண்டும். நடுவர் பொறுப்பு வகித்த கண்ணன் கடைசியாக ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹீமேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், அலெக்ஸாண்டர் என்று வரிசையாக சொல்லப்பட்டன பெயர்கள். தன் அப்பாவின் வீரத்திற்கும் ஆகிருதிக்கும் ஏற்ற பெயரை எதிர்பார்த்திருந்த கண்ணன், நாங்கள் சொன்ன எந்தப் பெயரையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் நிராகரித்துக் கொண்டே வந்தான். என் கற்பனைக்கெட்டிய பெயரை நானும் யோசிக்க ஆரம்பித்தேன். வெங்கடேஸ்வரா தியேட்டருக்குப்பின்னால் உள்ள 'முனீஸ்வரன்'  சிலை போல கம்பீரமாக இருந்ததினால் நான் அவருக்கு "முனீஸ்'  என்ற பெயரை முன்வைத்தேன்.
நல்ல வேள, "சனீஸ்' னு சொல்லாமப் போனடா! கண்ணனின் கண்கள் என்னை எரித்தன.
நரேன் ஒருவன் தான் எங்கள் வகுப்பிலேயே பணக்காரன். அவன் அப்பா வைர வியாபாரம் செய்பவர். மற்ற யாவரும் "அப்பிராணி" வீட்டுப் பிள்ளைகள். நாங்கள் அதுவரைப் பார்த்தேயிராத பழங்களையெல்லாம் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடியவன். அவனுடைய பிறந்த நாளின் போது அவன் வீட்டில் 'கேக்' எல்லாம் வெட்டிக் கொண்டாடுவார்கள்.
பள்ளி விடுமுறைகளில் 'மெட்ராஸ்' வரை போய் வருபவன். அவன்தான் சொன்னான், டேய், கண்ணனோட அப்பா 'ஹெர்குலஸ்' மாதிரி இருக்கார்ரா!
டேய் குண்டா! சைக்கிள் கம்பெனிப் பேரெல்லாம் சொல்லக் கூடாது என்று வாரினான் பிரசன்னா.
டேய்! பொடுகுத் தலையா! போன லீவுல மெட்ராஸ் போயிருந்தப்ப ஆர்னால்ட் நடிச்ச "ஹெர்குலஸ்' படம் பாத்தேண்டா. "ஹெர்குலஸ்" ங்கிறவென் கிரேக்க நாட்டு வீரன்டா.
நம்ம மதுரை வீரன் மாதிரியா? சதாசிவம் கேட்டான்.
ஆமாமாம். அப்படியும் வச்சுக்கலாம். ஹெர்குலஸ் ஆர்ம்ஸ் கண்ணனோட அப்பா ஆர்ம்ஸ் மாதிரியே இருந்துச்சுடா.
நரேன் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று நாங்கள் குழம்பியபோது விஜயகுமார், தான் உட்கார்ந்திருந்த பெஞ்சிலேயே சாய்ந்து படுத்துக்கொண்டு எங்களையெல்லாம்  திட்ட ஆரம்பித்தான். டேய்! ஒரு நல்ல பேரை வச்சுத் தொலைங்கடா! குண்டன் சொல்ற பேரு நல்லாத்தாண்டா இருக்கு. நம்மெல்லாம் லீவு விட்டா சீலயம்பட்டி கூடத் தாண்ட மாட்டோம். மெட்ராஸ் வரை போய் வாரவேன் சொன்னாக் கேளுங்களேண்டா.
கண்ணன் இந்தப் பெயரை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று குழம்பினான்.
அதுவரை அமைதியாய் சிந்தித்துக் கொண்டிருந்த திலீபனின் மூளையில் 'பல்பு' எரிந்தது. டேய், நானும் அந்தப் படத்தப் பாத்திருக்கேண்டா.இடைவேளைக்கு அப்புறம் அந்தப் படத்துல 'ஹெர்குலஸ்' வில்லய்ங்க கிட்ட மாட்டிகுவான்டா. அப்ப எங்கிருந்தோ ஒரு வீரன் வந்து அவெய்ங்கள கிழி கிழின்னு கிழிச்சிட்டு ஹெர்குலஸ்ஸ காப்பாத்துவான்டா. அவன் ஹெர்குலஸ்ஸ விடவும் பலசாலிடா.
ஆமாண்டா , அவன் பேரு ‘அட்லஸ்’டா! நரேன் கத்தினான்.
‘அட்லஸ்’ என்ற பெயரில் ஒட்டியிருந்த வசீகரம் எங்களுக்குப் பிடித்திருந்தது. கூடுதலாக , சரவணன் சொன்ன இன்னொரு விஷயமும். அட்லஸ் என்பவன்தான் இந்தப் பூமியைத் தன் தோளில் தாங்குபவனாம்.
தன் அப்பாவை இந்த பூமியைத் தன் தோளில் சுமப்பவனோடு ஒப்பிட்டதும் கண்ணனின் முகம் பெருமிதத்தால் ஒளிர்ந்தது.
அன்றோடு கண்ணனின் அப்பா எங்களுக்கெல்லாம் ‘அட்லஸ்’ ஆனார்.
***
ஒட்டு மொத்த ஊரிலும் மூன்று பலசாலிகள்தான் இருந்தார்கள். அட்லஸ், பூங்குடி மற்றும் எம்.ஜி.யார்.
பூங்குடி படிக்காதவன். ஊரறிந்த சிடுமூஞ்சி. மெயின் ரோட்டில் அடிக்கடி அவனைப் பார்க்கலாம். எங்கள் ஊரில் இருந்து வடநாட்டிற்குச் செல்லும் லாரிகளில் தினமும் வாழைக்காய் லோடு ஏற்றி இறக்குபவன். கேரளத்தில் இருந்து எங்கள் ஊருக்கு வந்து நிற்கும் லாரிகளில் இருந்தும் பலாப் பழ லோடு இறக்குவான். சிறுவர்களைக் கண்டாலே கண்கள் சிவக்க இரைந்து விழுபவன். காது கூசும் கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாக அவன் சொல்வதைக் கேட்கையில் இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கும். மாலை வேளையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடும் 'ஹை ஸ்கூல்" மைதானத்தில் பத்து ரவுண்டு ஓடி விட்டு, "புல் அப்ஸ்" கம்பியில் மூச்சு விடாமல் இருபத்தி ஐந்து முறை புல் அப்ஸ் எடுப்பான். பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கே மூச்சிரைக்கும். அதற்குள் அவனைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடி விடும். கூட்டம் கூடக் கூட அவனது இறுமாப்பும் கூடும். அண்ணே! இன்னும் பத்து புல் உப்ஸ் எடுங்கண்ணே! என்று கெஞ்சுவோம். வள்ளென்று விழுவான். மூர்க்கம் கூடிப் போய் சில சமயம் மைதானத்தில் இருக்கும் கற்களை எடுத்து எங்களின் மேல் எரியத் துவங்கிவிடுவான்.
எம்.ஜி.யார் கொஞ்சம் தன்மையானவன். அவனுடைய தம்பி நம்பியாரோடுதான் அவன் எப்போதும் ஊர்சுற்றிக் கொண்டிருப்பான். அவர்களின் அப்பா கந்தபிள்ளை மிகத் தீவிரமான சினிமா பைத்தியம். அந்தக் காலத்து "தெருக் கூத்து" கலைஞரும் கூட. யார் சொல்லியும் கேட்காமல் தன் இரு மகன்களுக்கும் சினிமா நடிகர்களின் பெயர்களைச் சூட்டி விட்டார்.
எம்.ஜி.யாரும் நம்பியாரும் தெருவில் சேர்ந்து நடந்து போகும் போது, ஊரில் வேண்டுமென்றே அவர்கள் பெயரை உரக்கக் கூப்பிட்டு கேலி செய்வார்கள். கேலி கிண்டல்களையெல்லாம் ஒற்றைப் புன்னகையில் கடந்து செல்லப் பழகியிருந்தார்கள் அவர்கள்.  
பூங்குடியை விடவும் எம்.ஜி.யார் பலசாலி. ஆனாலும் அவன் எந்தப் பொதுவெளியிலும் உடற்பயிற்சி செய்து நாங்கள் பார்த்ததில்லை. அவன் வீட்டிற்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் உடற்பயிற்சி செய்பவன் என்று கேள்விப் பட்டிருந்தோம். எப்போதாவது 'ஹை ஸ்கூல்" மைதானத்தில் தன் சட்டையைக் கழட்டி விட்டு "கபடி" விளையாடும் போதுதான் அவனுடைய உடற்கட்டைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும். அது மாதிரியான சந்தர்ப்பங்களில் "கபடி" விளையாட்டிலிருந்து விலகி எல்லாருடைய கண்களும் எம்.ஜி.யாரின் கல்லுடல் மீதே மொய்த்திருக்கும்.
இவர்களெல்லாம் யுகாந்திரங்களாக முயன்றாலும் எட்டி விட முடியாத உயரத்தில் இருப்பவர் எங்கள் அட்லஸ். ஐம்பொன் சிலை போல வசீகரிக்கக் கூடிய உடலழகும் சௌந்தர்யம் பொழியும் மென்னகையை எப்போதும் தாங்கியிருக்கும் அம்சமான முகமும் எங்களைப் போன்ற சிறுவர்களையும் அவருக்கு நண்பர்களாக்கின. எங்கள் ஒவ்வொருவரின் பெயரும் அவருக்கு நினைவில் இருக்கும். அட்லஸ் எங்கள் ஊர் காவல் நிலையத்தில் போலீஸ் "ஏட்டையாவாக" பணிபுரிந்தார். அதனால் ஊரில் யாவரும் அவரிடம் அகலாது அணுகாது தீக்காய்ந்தார்கள். தேரடித் தெருவில் பிள்ளையார் கோயிலின் பின்புறம் ஆச்சர்யமான முரணாக "காவல் நிலையம்" இருந்தது. தெருவில் நடந்து போகும் யாருக்கும் காவல் நிலைய முகப்பில் அடிக்கடி அட்லஸ் தன் முன் மரியாதையாக கைகளை கட்டி நின்றிருக்கும் ஒரு சிறு கூட்டத்திற்கு அறிவுரை சொல்லும் காட்சி காணக் கிடைக்கும். ஓடையில் சப்தமின்றி பாயும் குளிர்ந்த நீராய் எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் அட்லஸ் சில நேரங்களில் பெரும் பாறைகளையே ஆக்ரோசத்துடன் புரட்டிப் போடும் காட்டாறாய் மாறி குற்றம் செய்தவர்களை அடித்து காவல் நிலையத்திற்குள் இழுத்துப் போவதைப் பார்க்கையில் மனம் அதிர்ந்து பின்வாங்கும். அது போன்ற சமயங்களில் அட்லஸ் நடந்து போன கால் தடத்திலும் ரௌத்திரம் படிந்திருப்பதை உணர முடியும்.
அட்லஸுக்கு ஊருக்குள் புகழ் சேர்த்தது அவரின் உடலழகைக் காட்டிலும் அவர் செய்யும் சாகசங்கள்தான். குறிப்பாக, பாம்படிப்பதில். எங்களூர்ப் பாம்புகளுக்கு சிம்ம சொப்பனம் அவர். எந்த வகைப் பாம்பாக இருந்தாலும், "பதம்" பார்த்து விடுவார். அருகாமை வீடுகளின் பின்புறம் உள்ள தோட்டங்களில் எப்போதாவது பாம்பு நுழைந்து விடும். விழுந்தடித்துக் கொண்டு அட்லஸுக்கு தகவல் சொல்வார்கள் தெருவாசிகள். தகவல் தெரிந்தவுடன், ஒளியுடன் கூடிய கண்களோடு, பூட்ஸுக்கு மேலே, இரு சாக்குப் பைகளைக் கிழித்து முழங்கால் வரை பேண்ட்டைச் சுற்றி இறுக்கமாக கட்டிக் கொண்டு பாம்படிக்கும் தொரட்டியை கையில் ஏந்தி கிளம்பும் அவர்பின் முடிவற்ற கூட்டம் பின்தொடரும். பாம்பைப் பார்த்துவிட்டால் அவசரம் என்பதே இன்றி, ஒரு சதுரங்க ஆட்டக்காரனின் பொறுமையில் மெதுவாக பாம்பின் பின்புறம் சென்று தன் கையில் இருக்கும் தொரட்டியை செங்குத்தாக வைத்துக் கொண்டு பாம்பின் தலையில் பெருத்த விசையுடன் ஊன்றுவார். தொரட்டிக் கம்பி பாம்பின் தலையை ஊடுருவி சில அங்குலங்கள் பூமிக்குள் சென்று புதைந்திருக்கும். ஒரு முறையும் அவர் குறி தப்பியதேயில்லை.
சீலைக் காரியம்மன் கோயில் திருவிழாவில், "இளந்தாரிக் கல்லினை" நோக்கம் போல் தூக்கிப் பந்தாடுவார். எங்களைப் போன்ற சிறுவர்களை முதுகில் தாங்கிக் கொண்டு முடிவின்றி "தண்டால்" எடுப்பார். சித்திரை மாதத் தேர் திருவிழாவில் இளந்தாரிப் படையைக் கூட்டிக்கொண்டு முதல் ஆளாகத் தேர்ச் சங்கிலியில் கை வைத்து இழுத்துச் செல்வார். தேரிழுத்து களைத்துத் திரும்பும் ஆட்களுக்கு கண்ணனின் அம்மாவும் அக்காவும்  "பானகம்" கலந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
கண்ணனுக்கு தன் அப்பாவிடம் பிடித்தது கவட்டை**தான். அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கும் அவன்,

எப்போதாவது ஒருநாள் தன் அப்பாவின் "கவட்டையை" அவருக்குத் தெரியாமல் எடுத்து வந்து எங்கள் கண்களுக்குக் காட்டுவான். அந்தக் கவட்டையைக் கையில் வருடிப் பார்க்கையில், சூட்சும வடிவில் பல பறவைகள் சிறகடிக்கும் பேரரவம் செவிப்பறையில் மோதுவதை உணர்ந்திருக்கிறேன்.
சனிக்கிழமை மதியங்களில் நாங்கள் அனைவரும் கண்ணனின் வீட்டில்தான் இருப்போம். அந்நாட்களில் சனிக்கிழமைக்கென்று ஒரு மகத்துவம் இருந்தது.
சனிக்கிழமைதான் 'அட்லஸ்' பறவை வேட்டையாடும் நாள். கண்ணனின் வீடு ஊருக்கு வெளியில் கரட்டுப் பாதையில் ஹை ஸ்கூலுக்குப் பின்புறம் இருக்கும். வீட்டுக்கெதிரே ஒரு தோட்டம். அதனருகே இரு கறவை மாடுகள் கட்டப்பட்டிருக்கும். மாடுகளின் வால் முடியை ஒவ்வொருவரும் பிடுங்கி வைத்துக் கொள்வோம். அதைக் கொண்டுதான் "தைலான்**" குருவி பிடிக்க வேண்டும்.
ஒரு மஞ்சள் பைக்குள் கோலிக் குண்டுகளையும் கவட்டையையும் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வெயிலை மறைத்துக் கொண்டு நிற்பார் அட்லஸ். வந்ததும் ஒரு சங்கடமான கேள்வியை எங்களை நோக்கி வீசுவார்.  
படிக்கிற வேலை இல்லையாடா மாப்ளைகளா?
பதிலற்று நாங்கள் புன்னகைக்கும்போது, நிழலைப் போல எங்களைக் கடந்து வெளியில் சென்று விடுவார். அவரோடு அவர் வயது ஆட்கள் சிலரும் சேர்ந்து கொள்வார்கள். ஓட்டமும் நடையுமாக அவர்பின் நாங்கள் சென்றுகொண்டிருக்கையில் ஒரு நாய்க்குட்டியைப் போல வெயிலும் எங்களைப் பின்தொடர்ந்து வரும்.  
வெகு தொலைவுக்கப்பால் உள்ள ஓடையைக் கடந்து காட்டுக்குள் நுழையும்போதே, வேகத்தைக் குறைத்து நின்று நிதானித்து நடக்கத் துவங்கி விடுவார். கவட்டையின் ரப்பர் வாருக்கிடையே "கோலிக் குண்டை" இடுக்கிக் கொண்டு குறி வைக்கத் துவங்கி விடுவார்.
கிளைகளில் இளைப்பாறும் குருவிகள் அவருக்கு இலக்கேயல்ல. அவர் குறி வைப்பது பறந்து கொண்டிருக்கும் பறவைகளைத்தான். பெரிய பெரிய புறாக்களாக இருந்தாலும்,  செம்பூத்துகளானாலும், அளவில் சிறிய தேன்சிட்டாக இருந்தாலும் ஓரே குறிதான். ஒரு முறை குறி தப்பிவிட்டால் மறுமுறை குறி வைப்பதில்லை. கவட்டையிலிருந்து காற்றதிரக் கிளம்பும் கோலி குண்டு முதல் குறியிலேயே பல பறவைகளைச் சாய்த்து விடும்.
பறந்து கொண்டிருக்கும் பறவைகளை எப்படிக் குறிவைத்து அடிக்கிறார்? என்று நாங்கள் வியந்து கொண்டிருக்கும் போதே, அவருடன் வருபவர்கள் சிறிய மஞ்சள் பைகளில் செத்துப் போன பறவைகளை சேகரித்துக் கொண்டிருப்பார்கள்.
பெருமை பொங்க, தன் கவட்டையை தோளில் தொங்க போட்டுக் கொண்டே, அடர்ந்த மீசையை முறுக்கியவாறு, " டேய், வில்லுக்கு விசயன்னா** கவட்டைக்கு இந்த முத்தையன்டா" என்று அட்லஸ்

முழங்கும் போது எங்களோடு சேர்ந்து கொண்டு அவர் முதுகுக்குப் பின்னால் விரிந்து நிற்கும்
இளவெயிலும் ஆமோதித்து நகரும்.    
***
படிக்கவே மாட்றான் சார். புஸ்தகத்த எடுத்து வச்சு பெராக்கு** பாக்க ஆரம்பிச்சான்னா அதுக்கு ஒரு வக

 தொக கெடயாது. எத்தன டெஸ்ட் வச்சாலும் மருந்துக்கு கூட ஒரு பாஸ் மார்க் வாங்கறது கெடயாது.
பொம்பளப் புள்ளக கிட்ட வம்பிளுக்குறது. அக்ர அக்ரமா** பேசுறது. மொனப்பு** கூடிக்கிட்டே வருது. கூடப்

 படிக்கிற எரும மாடுகளோட தரித்திரியம் இது கழுதைக்கும் புடுச்சுக்கிருது. ஒண்ணா ஒக்கார வச்சா படிக்க மாட்டாய்ங்கன்னுதான் தனித் தனியா ஒக்கார வச்சிருக்கேன். இன்னுங் கொஞ்சம் தலையெடுத்தா ஊருக்குள்ள ஒங்களுக்கு இருக்கிற நல்ல பேரக் கெடுத்திருவ்யான். பாத்துக்கங்க. ஒங்க காதுல எதுக்கும் போட்டு வைக்கலாம்னுதான் வரச் சொன்னேன்.
கண்ணனைக் காட்டி சக்திவேல் சார் ‘குற்றப் பத்திரிகை’ வாசித்துக் கொண்டிருக்கும்போது அட்லஸ் அவனைக் கூப்பிட்டார். தயங்கிக் கொண்டே அவர் அருகில் போனான் கண்ணன். அனல் தகிக்கும் கண்களுடன் புறங்கையினால் அவன் கன்னத்தில் ஒரு ‘இழுப்பு’ இழுத்தார். சரிந்து தலைசாய்ந்தான் கண்ணன். எல்லாரும் ஓடிச் சென்று அவனைத் தூக்கினோம்.
சக்தி வேல் சார் துடித்துப் போனார். அய்யய்ய! என்ன சார் இது? ஒங்க கையால அவன அடிச்சா அவன் ‘செகிழு’ செதஞ்சிரும்ங்க. சின்ன பையன்ங்க. வீட்ல கொஞ்சம் கண்டிச்சு வெப்பெங்கன்னு தான் ஒங்ககிட்ட தகவல் சொன்னேன். நீங்க என்னடான்னா அவன வேரோட பிடுங்கிருவெங்க போல இருக்கே. இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா நான் இவனோட அம்மாவையே வரச் சொல்லியிருப்பேனே. நான் பாத்துகிறேன் சார். நீங்க கெளம்புங்க. நல்ல ஆளு சார் நீங்க. “காஞ்சு கெடக்குதுன்னு கடவுளுக்கு மனுச் செஞ்சா பேஞ்சு கெடுத்துருச்சே பெருமாளே என்ன பண்ணங்க்ற கணக்கு சார் ஒங்க கணக்கு!
கண்ணனை நாங்கள் அடை காத்துக் கொண்டிருந்தோம். முடிவற்ற கண்ணீர்ப் பெருக்கினால் உப்புப் பூத்துப் போயிருந்த முகத்தோடு இடைவெளி விட்டு விட்டு தேம்பிக் கொண்டிருந்தான் அவன்.
எங்கள் ஒவ்வொருவனின் அடி வயிற்றிலும் சக்தி வேல் சாரின் மேல் முடிவிலியாய்ப் பொழிவதற்கு அமில மழை தயாராய் சுரந்து கொண்டிருந்தது.
அட்லஸால் பேச முடியவில்லை. தொண்டையில் அவருக்கு நெருப்பெரிந்தது. இவன ‘மப்ப’க் கழட்டாமா விட மாட்டேன் சார். ஒத்தைக்கு ஒத்த ஆம்பளப் பிள்ள சார். பொம்பளப் பிள்ளைய அடுத்த வருஷம் கெட்டிக் குடுத்துருவேன். இவன் ஆளாயி குடும்பத்தத் தாங்க வேணாம். அவன் பொழப்பக் கூட பொழக்க மாட்யான் போலருக்கே! இதுக்கா சார் வம்பாடு பட்டு இவன படிக்க வக்கிறேன்? வீட்டுக்கு வந்தா டி.வி. அத விட்டா, ஹை ஸ்கூல் கெணத்துல குளிக்க போறது. கூட்டுக் காரெய்ங்களோட சேர்ந்துகிட்டு ‘தைலான்’ குருவி பிடிச்சு சுட்டுத் திங்கிறியான். பாதி நாள் நான் வீட்ல இருக்குறதில்ல. அவ கிட்ட சொல்லிட்டு போன்னா, இவன் அவளுக்கும் ‘டிமிக்கி’ கொடுத்துட்டு வெளிய கெளம்பிப் போயிர்றான். இன்னைக்கு இவன ‘வெள்ளாவி’ வெக்காம நான் அடங்க மாட்டேன் சார்.
திமிறிக் கொண்டிருந்த அட்லஸை பொழுது சாயும்வரை வெகுநேரம் தேற்ற வேண்டி இருந்தது சக்திவேல் சாருக்கு. முடிவாக, தேம்பலும் உரக்கச் சடவும் கூடி இருந்த கண்ணனை தன்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்புகையில் சக்தி வேல் சாரைத் திரும்பிப் பார்த்தார் அட்லஸ்.
இவன் முதுகுத் தோல உரிச்சாவது இவன வெளங்க வச்சுருங்க சார், என்று கெஞ்சலாகக் கேட்டார்.
ஒரு வகைக்கு கொண்டு வந்துருவோம் சார். கவலப் படாம போங்க, என்று வழியனுப்பி வைத்தார் சக்திவேல் சார். திரும்பிப் போய்க் கொண்டிருக்கும் அட்லஸின் முதுகைப் பார்த்துக் கொண்டே, எங்களிடம் மெதுவாகச் சொன்னார்.
டேய்! கண்ணன் கை கால் சொகத்தோட இருக்கணும்னா அவன் வீட்டுப் பக்கம் தலை காட்டீறாதெங்கடா! இந்த ஆள் சீரப் பாத்தா அவன் மகன நிக்க வச்சு சுட்டு புடுவ்யான் போல இருக்கு.
முதல் முறையாக தலை குனிந்து இருளோடு நடந்து கொண்டிருக்கும் அட்லஸைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தோம்.
அந்தச் சம்பவத்திற்குப் பின் கண்ணன் வீட்டுக்குப் போவதை நாங்களாகவே நிறுத்திக் கொண்டோம்.
***
சுழித்துக் கொண்டோடும் கங்கை நதிப் பிரவாகம் போல வாழ்க்கை விரைந்து நகர்ந்தது. மேல்நிலை வகுப்பிற்கு உள்ளூரிலேயே வேறு பள்ளிக்கு மாறினேன். கல்லூரிப் படிப்பு நகரத்தில். வேலை. பணி உயர்வு. மீண்டும் வேலை மாற்றம் என பல காலங்கள் பல இந்திய நகரங்களில் வசித்து, தேன் இருக்கும் பூக்களையெல்லாம் தேடித் போய் உறிஞ்சும் தும்பிப் பூச்சி வாழ்க்கையின் உச்சமாக சிங்கப்பூருக்கும் வந்தாயிற்று. கனவுகள் கண்டு கற்பனையில் புரண்டெழுந்து மணமுடித்து பிள்ளைகள் பெற்று வாழ்வின் நடுவாந்திரத்திற்கும் வந்தாயிற்று. சுடுநீரைக் கால்களில் ஊற்றிக் கொண்டு ஓடியலையும் வாழ்க்கையில் “ பேஸ் புக்”கின் தயவால் அங்கொன்றும் இங்கொன்றும் சிலர் தவிர பல நண்பர்களுடனான தொடர்பை முற்றிலும் இழந்தேன். அவர்கள் எல்லாம் எங்கு சென்று மறைந்தார்கள்? அவர்களுடன் வாழ்ந்த அந்த வசந்த காலம் வெறும் கனவுதானா? ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத காலமா அது?
இப்போதெல்லாம இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஊருக்குச் செல்வது கூட அரிதாகி விட்டது. அபூர்வமாக, சமீபத்தில் குடும்பத்தோடு ஊருக்குச் செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அம்மா அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி. வண்டிக் காரனிடம்  சவுக்கடி வாங்கி அதி வேகமாய் ஓடும் காளை மாடுகள் போல ஊர் வேகமாய் மாறி விட்டது. நகரம் அதி நகரமாகி விட்டது. கிராமங்கள் சிறு நகரங்களாக மாறி வருகின்றன. 
கிராமம் முற்றிலுமாக மறைந்து விடுமுன் என் நான்கு வயதுப் பையனுக்கு ஊரைச் சுற்றிக் காட்டக் கிளம்பினேன். நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த காட்சிகள், பருகிய அழகுகள், ஊற்றுத் தடங்கள், வாய்க்கால், நதி தீரம், கோயில்கள், தெரிந்தவர் வீடுகள், ஹை ஸ்கூல் மைதானம் என்று ஒரு நாள் முழுதும் சுற்றி அலைந்து இருளத் துவங்கியதும் வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தோம்.
பேச்சியம்மன் கோயில் தாண்டி காளி கடை முன் ஒரு சிறு கூட்டம் தென்பட்டது. ரோட்டின் ஓரமாய் மோட்டார் பைக் ஒன்று விழுந்து கிடந்தது. கைகள் முழுக்க சிராய்ப்புகளோடு இருந்த இளைஞன் ஒருவனுக்கு சிலர் முதலுதவி செய்து கொண்டிருந்தார்கள்.
இளைஞன் தாறுமாறான பதட்டத்துடன் இரைந்தான். நான் ஒழுங்காத்தான் வண்டி ஒட்டிகிட்டு வந்தேன். இந்த கெழவன்தான் கண்ணு மண்ணு தெரியாம குறுக்க வந்தான். "ஹாரன்" அடிச்சுக்கிட்டே ‘வெலகுயா! வெலகுயான்னு’ காட்டுக் கத்து கத்திக்கிட்டு வர்றேன். எளவு! காது சரியாக் கேக்குதோ என்னமோ?
‘சரி ஒரு பேச்சுல விடுப்பா. வயசாளிய மரியாதையா பேசுப்பா. அடி பலமா படல. இந்த மட்ல தப்பிச்சிட்டோம்னு நெனச்சிக்க. இந்தா இந்த சோடாவக் குடிச்சுட்டு போ! என்று ஒரு சோடாவை உடைத்து அவன் முன் நீட்டினாள், கடைகாரக் காளியக்கா.
சோடாவைக் கொடுத்து விட்டு, திரும்பிப் பார்த்து யாரையோ கடுப்பாக ஏசிக் கொண்டிருந்தாள். நீ வீட்டுக்கு போ மாமா. ரோட்டுப் பக்கம் வாறப்ப சூதானமா வர வேணாமா? இன்னைக்கு ஒரு பயல, 'போட்டுப்' பாக்கத் தெரிஞ்சயே? இன்னும் நீ என்ன எளந்தாரியா? ரிடயர் ஆகி பத்து வருசமாகப் போகுது. நிதானம் தவறிக் கிட்டே வருதாயில்லையா? ஒன் மகென்தான் 'டீச்சரா' இருக்கானே. வண்டிய ஓடிக்கிட்டு "சல்லு புல்லு"னு இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் போய் வாறானே? எது வேண்ணாலும் அவென்கிட்ட சொல்லி விட வேண்டியதுதானே? இல்லாட்டி,அக்காகிட்ட சொல்லி விடு. நீ எதுக்கு கெடந்துகிட்டு தவுதாயப் படற?
முதல் பார்வைக்கு அவர் யாரென்று தெரியவில்லை. இருட்டுக்குள் சற்று கூர்ந்து பார்த்தபோது தெளிவாகத் தெரிந்தது. அட்லஸ்... வாழ்வின் நீல்வெளியில் எங்கோ தொலைந்து போயிருந்த அட்லஸ். வெளிறித் தளர்ந்து போன தேகத்தோடு கடை பெஞ்சில் ஆசுவாசமாக அமர வைக்கப் பட்டிருந்தார். கறுத்துச் சுருங்கிக் கன்றிப் போயிருந்த முகச் சதை துடித்துக்கொண்டிருந்தது. வாழை மரம் போல் வடிவாய் இருந்த தோளும் கைகளும் புடலங்காய் போல மெலிந்து வதங்கித் தளர்ந்திருந்தன. கசங்கி இருக்கும் சட்டையும் லுங்கியும் காற்றில் பட படத்து சத்தமிட்டுக் கொண்டிருந்தன. நடுங்கிக் கொண்டிருந்த கை விரல்களைத் தாண்டி மணிக்கட்டில் நரம்புகள் விகாரமாய் புடைத்திருந்தன. கழுத்தைச் சுற்றியுள்ள தசைகள் வற்றிப் போய் மெல்லெலும்புகள் தெரிந்தன. நெடுநேரம் மௌனமாய் இருந்தவர், ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வாங்கி, ஆவேசமாகக் குடித்தார். வாய் வழியே வழிந்த குளிர்ந்த நீர் அவர் நெஞ்சை நனைத்தது. 
வறண்டு கனத்துப் போயிருந்த என் தொண்டையை மெல்ல எச்சில் கூட்டி ஈரப்படுத்தினேன். ஒரு கணம், என் ஆழ்மனதில் சாஸ்வதமாய் பொறித்து வைத்திருந்த அட்லஸின் இளம் பேருருவம் பேரோளியுடன் மேலெழுந்தது. அதற்கு மேல், அங்கிருக்கப் பிடிக்காமல், பையனைக் கூட்டிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.
அதுவரை அமைதியாய் இருந்த என் பையன், இப்போது கேட்டான்.
யாருப்பா அது?
அவர் பேரு ‘அட்லஸ்’.
அட்லஸ்ன்னா ?
வறண்ட குரலில் சொன்னேன் . “இந்த பூமியையே தன்னோட தோள்ல தாங்குறவரு”!
இந்த பூமியையா?
ஆமா.
கதவைத் திறந்த என் அம்மா தன் பேரனைப் பார்த்துக் கேட்டார். என்ன தொர? நாளெல்லாம் எங்க போய் சுத்திட்டு வர்றீக? யாரயெல்லாம் பாத்தீக?
விழிகள் விரியக் குழந்தை சொன்னான். பாட்டி! நாங்க அட்லஸப் பாத்தோம்.
அது யாருப்பா எனக்கு தெரியாம இந்த ஊர்ல அட்லஸு?
இது கூட தெரியாதா பாட்டி?  அட்லஸ்தான் இந்த பூமியையே தன்னோட தோள்ல தாங்குறவரு!
உற்சாகமாக கூவியபடி பாட்டியின் தோளை நோக்கிப் பாய்ந்தான்.
(முற்றும்)      - கணேஷ் பாபு

1.        ஹல்க் ஹோகன் – அமெரிக்க மல்யுத்த வீரர்.
2.        கவட்டை – உண்டிவில்
3.        தைலான் – ஒரு வகைக் குருவி. சிறியதாய் கருப்பு நிறத்தில் இருக்கும். மழை பெய்து ஓய்ந்ததும் கூட்டம் கூட்டமாக தாழப் பறக்கும். சிறுவர்கள் , குருவிகள் பறக்கும் இடத்தில் முழமளவு நீளமான ஒரு சிறிய குச்சியை  தரையில் ஊன்றி குச்சியின் முனையில் மாட்டின் வால் முடியை குருவியின் உடல் கொள்ளுமளவு விட்டத்தில் சுருக்கிட்டுக் காத்திருப்பார்கள். கூட்டமாக தரைக்கருகே வேகமாக பறக்கும் குருவிகளில்,சில குருவிகள் மாட்டு வால்ச் சுருக்கில் மாட்டிக் கொள்ளும். 
4.        விசயன் – அர்ச்சுனன்
5.        பெராக்கு – வேடிக்கை
6.        அக்ர அக்ரமா – கெட்ட வார்த்தை பேசுதல் (வட்டார வழக்கு)
7.        மொனப்பு – திமிர் (வட்டார வழக்கு)