வியாழன், 5 நவம்பர், 2015

பின் நவீனத்துவம் –ஓர் அறிமுகம்


பின் நவீனத்துவம் என்பது ஒரு உத்தியோ, ஒரு இலக்கிய வகைமையோ அல்லது ஏதோ ஒரு “இஸமோ” அல்ல. அது தற்காலத்தில் புழங்கி வரும் ஒரு இலக்கியப் போக்கு(Trend). பின் நவீனத்தைப் புரிந்து கொள்வதற்கு முன், நவீனத்துவம் பற்றிய புரிதல் மிக அவசியம். கவிதையில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை என்ற வடிவங்கள் இருப்பது போல உரைநடையிலும் பல கூறுகள், கோட்பாடுகள் இருக்கின்றன. இவை காலத்திற்குத் தகுந்தவாறு மாறிக்கொண்டே இருக்கும்.

படைப்பாளி எப்போது எழுதத் தொடங்குகிறானோ அப்போதே மரபின் துருவேறிய பகுதிகள் உதிரத் தொடங்குகின்றன. அவன் தன் முதல் கதையிலோ கவிதையிலோ கூட மரபை மீறும் ஒரு ஆவேசத்தைதான் முன்வைக்கிறான். தன் சமூகம் தன் முன் வைக்கும் நம்பிக்கைகள், மேன்மைகள், புனிதங்கள் எல்லாமே அவனுடைய படைப்பில் தூசுதட்டப் படுகின்றன. கேள்வி கேட்கப்படுகின்றன. அவ்வகையில், தமிழின் முதல் நாவலான மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் “பிரதாப முதலியார் சரித்திரமும்” சரி, முதல் சிறுகதையான வ.வே.சு ஐயரின் “குளத்தங்கரை அரசமரமும்” சரி, சமூகத்தின் அதுவரையிலான அற்ப நம்பிக்கைகளையும் பொய் விழுமியங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகின்றன.

நவீனத்துவத்திற்கான விதை இங்கே துவங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்க ஒரு அலை கிளம்பியது. அந்த அலை அதுவரை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் மறுபரிசீலனை செய்தது. எல்லாத் துறையிலும் இந்த அலையைத் துவக்கி வைத்த முன்னோடிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நவீன தலைமுறை நன்றிக்கடன் பட்டிருக்கிறது.   இந்து மதத்தில் நிலவிய மூடப் பழக்கங்களைக் களைந்து, அதனை நவீனப்படுத்தியவர்கள் என்று சுவாமி விவேகானந்தர் துவங்கி பலரைச் சொல்ல முடியும். சமூக தளத்தில் நிலவிய பல கண்மூடி வழக்கங்களைக் களைந்து (இன்றளவும் முழுமையாகக் களைய முடியவில்லை என்பது வேறு விஷயம்) சமூகத்தை நவீனப்படுத்திய சான்றோர் என ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி போன்றவர்களைச் சுட்டலாம். அதுபோல், கல்வி, மருத்துவம் முதலான பல துறைகளையும் நவீனமயமாக்க முன்முயற்சி எடுத்த பல சான்றோர்கள் இருக்கிறார்கள். இந்த முன்னோடிகள் யாவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

உலக இலக்கியத்திலும் ஏறக்குறைய இந்த காலகட்டத்தில் நவீன மறுமலர்ச்சி ஏற்பட்டது. உலக அளவில் சிறுகதைகளில் நவீனத்துவத்தை முன்னெடுத்தவர் என்று “சிறுகதைகளின் பிதாமகன்” ஆண்டன் செக்காவைச் சொல்லலாம். நாவல்களில் பால்சாக், சார்லஸ் டிக்கன்ஸ், ஜாக் லண்டன் போன்றோர் நவீனத்துவ முன்னோடிகள். (தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி இருவரையும் நவீனத்துவ முன்னோடிகள் வரிசையில் சேர்க்க நான் விரும்பவில்லை, அவர்கள் அப்போதே பின் நவீனத்துவக் கூறுகளை தங்கள் எழுத்துகளில் கொண்டுவந்து விட்டார்கள் என்று நான் நம்புகிறேன்)

உலக இலக்கியத்திலும், தமிழ் இலக்கியத்திலும் இருபதாம் நூற்றாண்டு நவீனத்துவத்தின் உச்சம் என்றானது. தமிழ்க்கவிதையில் பாரதி கிளப்பிய அலையின் வீச்சு தமிழ் வாசகனை சுருட்டி வேறொரு உயரத்திற்கு எறிந்தது. உரைநடையில் அந்த வேலையைச் செய்தவர் புதுமைப்பித்தன்.
நவீனத்துவத்தின் மிக முக்கியமான கருவிகள்: அறிவியல் (புதிது புதிதாகக் கண்டுபிடித்து புழக்கத்திற்கு வந்த அறிவியல் கருவிகள்), நவீன ஆங்கில மருந்துகள், தொழிற்சாலைகள், மேம்படுத்தப்பட்ட கல்வி, போக்குவரத்து போன்றவை. இவை யாவும் அதுவரை இருந்த சமூக யதார்த்தத்தை மாற்றின. இதே கருவிகள் இலக்கியத்திலும் பயன்படுத்தப்பட்டு சமூகத்தின் சிந்தனை முறையை மாற்றியமைத்தன. “முற்போக்கு”, “நவீனத்துவம்” போன்ற புதிய சொற்கள் தமிழுக்குக் கிடைத்தன. பேச்சு வழக்கில் “அதாவது... சயன்டிபிக்கா பாத்தா....” என்று யாராவது பேசத் தொடங்கினால் சுற்றியுள்ளவர்கள் கவனிக்கத் துவங்கினர்.

புதுமைப்பித்தனில் தொடங்கிய நவீனத்துவம், சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே.சில குறிப்புகள்” நாவலில் முழுமையடைந்தது. “ஜே.ஜே. சில குறிப்புகள்” நவீனத்துவத்தின் உச்சம் என்று சொல்லக்கூடிய அதே வேளையில், ஒருவகையில் பின்நவீனத்துவத்திற்கு, நவீனத்துவத்தின் கதவுகளைத் திறந்து வைத்ததே “ஜே.ஜே.சில குறிப்புகள்” தான் என்று சொல்லத் துணிவேன். அந்த நாவலின் அழகும், கம்பீரமும், முன்னறியப் படாத வடிவமும் இன்றும் ஒரு இலக்கிய வாசகனுக்கு அது அளிக்கும் வாசிப்பு அனுபவமுமே சாட்சி.

புதுமைப்பித்தன் தன் முன்னிருந்த சமூகத்தின் மனசாட்சியைத் தன் எழுத்தின் மூலம் இடையறாது தொந்தரவு செய்தார். அவரது நவீனத்துவ பேனாதான் தமிழ் இலக்கியத்தை வேறு திசையில் மடை மாற்றியது. “பொன்னகரம்”, “மகாமசானம்”, “நிகும்பலை”, “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” போன்ற கதைகள் நவீனத்துவத்தின் தீப்பொறிகள். இதனைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, கி.ராஜநாராயணன், வண்ணநிலவன் போன்றோர் நவீனத்துவத்தை முன்னெடுத்தனர்.

நவீனத்துவத்தின் ஒரு கூறாக யதார்த்தவாதம்(Realism) எழுந்தது. “உள்ளது உள்ளபடியே” என்பதே இதன் கொள்கை. எமிலி ஜோலாவின் புகழ்பெற்ற வாசகம் “ A Slice of Life” என்பதன் தமிழ் எதிரொலி. இந்த கூற்றின்படி, உள்ளது உள்ளபடியே, கண்டதைக் கண்டபடியே சொல்வது என்ற முறை உருவானது. அதாவது, யதார்த்தவாதக் கதைகள் வாழ்வின் ஒரு துண்டை வெட்டி எடுத்து வாசகன் முன் ரத்தமும், சதையுமாகத் துடிக்கத் துடிக்க முன்வைப்பது. இந்த விதியின்படி, ஒரு கதாபாத்திரத்தின் குண இயல்புகளை அதன் ஒரு செயல் மூலமோ, அது பேசும் முறையின் மூலமோ, அது பார்க்கும் காட்சியின் மூலமோ எழுத்தாளர் உணர்த்திவிடுவார். “Minimalism” என்ற ஆங்கிலப் பதத்தின் செயல் வடிவம். மேலதிக கற்பனைக்கு இடம்கொடுக்காமல், ஒரு பொருளையும், காட்சியையும் அப்படியே குறைந்த சொற்களில் (எந்த அளவிற்குக் குறைக்க முடியுமோ அந்த அளவிற்குக் குறைத்துவிடுவது – தற்போதுள்ள தமிழ் குத்துப்பாடல் நடிகைகளின் உடை போல) சொல்லுவது. இன்னும் சொல்லப் போனால், “காட்டுவது”. வாசகன் தன் கற்பனை மூலம் தான் வாசிக்கும் பிரதியை விரிவு செய்யவே இடமளிக்காமல், ஆவண நடையில் எழுதப்படும் பிரதிகள் இவை. அதனால்தான் பெரும் நாவல்களாக விரியக்கூடிய ஹெமிங்வேயின் “கிழவனும் கடலும்”, சுந்தர ராமசாமியின் “புளிய மரத்தின் கதை”, வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” போன்ற நாவல்கள் ரியலிஸ சல்லடைகளில் சிக்கி பாதி மலர்ந்த மலர்களாக நின்று விடுகின்றன.

நவீனத்துவத்தின் முக்கியத் தன்மைகள், ஒருமைப்படுத்துதல் (Univalent), மையப் படுத்தல் (இந்தப் படைப்பின் திரண்ட கருத்து யாது என்று பள்ளி, கல்லூரிகளில் இலக்கியப் படைப்புகள் குறித்து கேட்கப்படும் அபத்தமான கேள்விகள் இதிலிருந்துதான் தோன்றியிருக்குமோ?), திட்டமிட்ட வடிவம், குறிப்பிட்ட நோக்கம் போன்றவை. பின் நவீனத்துவம் இதற்கு நேரெதிர் கூறுமுறை. கிட்டத்தட்ட புதுக்கவிதைக்கும், நவீன கவிதைக்கும் உள்ள வேறுபாடுதான் (கிட்டத்தட்ட என்ற வார்த்தையைக் கவனிக்கவும், இதையே முழு முடிவாகக் கொள்ளக் கூடாது).

ஆனால், நவீனத்துவத்தின் முக்கியத் தன்மையான மையப்படுத்துதல், ஒருமை போன்றவை வாசகனின் அடிப்படைக் கற்பனைக்கே வேலையில்லாமல் செய்து விடுகிறது. எழுத்து என்பது இரண்டு விதமான அடிப்படைத் தன்மைகள் கொண்டதாக இருக்கிறது. வாசிப்புத்தனம் (Readerly), எழுத்துத்தனம் (Writerly). வாசிப்புத்தனம் என்பது ஒரு பிரதியில் உள்ள மொழி எந்த அளவுக்கு யதார்த்தமாக இருக்கிறது என்பது. எழுத்துத் தனமோ எழுதுபவனின் சுயப் பிரக்ஞை சார்ந்தது. ஆக, ஒரு பிரதியைப் படிக்கும்போது இரண்டு விதமான அர்த்தங்கள் கிடைக்கின்றன. ஒன்று, பிரதியில் கிடைக்கும் அர்த்தம். இன்னொன்று, வாசகன் புரிந்து கொள்ளும் அர்த்தம். ஆக, ஒரு பிரதியில் குறைந்தது இரண்டு வித அர்த்த சாத்தியங்கள் இருக்கும்போது மையப்படுத்துதலும், ஒருமைப்படுத்துதலும் எங்ஙனம் சாத்தியம். பின் நவீனத்துவம் பிறப்பது இங்கேதான்.



ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்: சுந்தர ராமசாமியின் “புளிய மரத்தின் கதை” நவீனத்துவ நாவல். கிராமத்தின் நடுவில் உள்ள ஒரு புளிய மரம். அந்த மரத்தின் அருகாமையில் பேருந்து நிறுத்தம், கடைகள் போன்றவை. கிராமம் மெல்ல மெல்ல ஓரு சிறுநகரமாக மாறத் துவங்குகிறது. ஆனால், நகர விரிவாக்கத்திற்கும் சுய லாபத்திற்கும்  பெரும் முட்டுக்கட்டையாக ஒரு புளிய மரம் நிற்கிறது. ஆகவே, அதை வெட்ட வேண்டும் என்று கிளம்பும் ஒரு கும்பல். அந்த மரம் காலம் காலமாக அங்கே நின்றிருக்கிறது. ஆகவே, அதை வெட்டக் கூடாது என்று தடுக்கும் ஒரு கும்பல். கடைசியில், எதிர்பாராத முறையில் அந்த மரம் இறக்கிறது. இந்தப் புளிய மரம் சமூக மாற்றத்திற்காக நாம் கொடுக்கும் விலைக்கான குறியீடாக நாவலில் வருகிறது. கிட்டத்தட்ட இந்த நாவலுக்கு இணையாக சா.கந்தசாமியின் “சாயாவனம்” நாவலைச் சுட்டலாம். இந்த இரண்டு நாவல்களிலும், நாவல் வடிவம் கச்சிதமாக, குறைந்த சொற்களில், Slice of Life ஐக் காட்டக்கூடிய, ஒருமைத் தன்மையும், திட்டமிட்ட வடிவ ஒழுங்கும், மையமும்,குறிப்பிட்ட நோக்கமும் இருப்பதை வாசகன் உணரலாம்.



தொண்ணூறுகளில் எழுதப்பட்ட ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” மேற்சொன்ன எந்த வடிவ ஒழுங்கும் அற்றது. நாவலின் மொழி கச்சிதமான, குறைந்த சொற்களில் சொல்லப்பட்டதல்ல. மாறாக, கட்டற்றுப் பாய்வது. கரையை நிறைத்து, சில சமயம் கரையை மீறி வழியும் ஆற்று நீர் போல, கிடைத்த இடைவெளிகளில் திமிறிப் பாயும் மொழி. நாவலின் வடிவம் நெடுஞ்சாலை போல துல்லியமானதல்ல. காட்டுச் செடிகளின் வழியே செல்லும் ஒற்றையடிப் பாதை போன்றது. வடிவமற்ற வடிவம் கொண்டது. துண்டாடப்பட்டு, முன்னும் பின்னும், ஜெயித்தும் தோற்றும் அலையும் வடிவம், நாவலில் மையம் மற்றும் திட்டமிட்ட நோக்கம் என்று ஒன்றும் இல்லை. கற்பனையால் இந்திய ஞான மரபையும், அதன் செழுமையையும், காவிய தரிசனங்களையும் ஒருசேர அள்ள முயல்வது. அதே சமயம் அதன் அழகின்மையையும், அபத்தத்தையும் சொல்லி உடைத்துப் போடுவது. வாசகனையும் எழுத்தாளனுக்குச் சமானமாய் இயங்க வைப்பது. வாசக உழைப்பைக் கோருவது. பன்முக அர்த்த தளங்களை விரித்தெடுப்பது. பின் நவீனத்தின் கிட்டத்தட்ட அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய நாவல். இந்த நாவலுக்குப் பின்தான், இனிமேல் வாசகன், கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டே, வாயில் எதையாவது போட்டு மென்றுகொண்டே ஒரு இலக்கியப் படைப்பை படிக்க முடியாது என்ற நிதர்சனம் உருவானது.
சிறுகதையில் இதற்கிணையான கதைகளாக, பிரேம்-ரமேஷின் “கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்”, கோணங்கியின் “பாதரஸ ஓநாய்களின் தனிமை”, எஸ். ராமகிருஷ்ணனின் “தாவரங்களின் உரையாடல், நாளங்காடி பூதம்”, ஜெயமோகனின் “படுகை”, முருக பூபதியின் “சின்னமனூர் சர்க்கஸ்காரி”, யுவன் சந்திரசேகரின் “நான்காவது கனவு”, பவா செல்லத்துரையின் “பச்சை இருளன்” போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

நவீனத்துவம், ஒரு பெரியவர் மிக கவனமாக அடுக்கிவைத்த சீட்டுக்கட்டு போன்றது. பின் நவீனத்துவமோ ஒரு சிறுவன் விளையாட்டாக கலைத்துப் போட்ட சீட்டுக் கட்டு. தன் குழந்தைக்கு தலையில் எண்ணெய் வைத்து, படிய சீவி, அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்பும் அம்மா நவீனத்துவத்தின் பிரதிநிதி என்றால், அம்மாவுக்கு கைகாட்டிவிட்டு பள்ளி செல்லும் வழியில் தன் தலைமுடியைத் தானே கலைத்துக் கொள்ளும் குழந்தை பின் நவீனத்துவத்தின் பிரதிநிதி. நவீனத்துவத்தின் சிக்கல்களை மறுபரிசீலனை செய்து கொண்டு அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதே பின் நவீனத்துவம். நவீனத்துவத்தின் பார்வையில் சிக்காத அல்லது நவீனத்துவம் கண்டு கொள்ள மறந்த அம்சங்களை அல்லது நவீனத்துவத்தின் விளைவால் உருவான சீர்கேட்டைத் தன் போக்கில் அவதானித்து, பரிசீலனை செய்து வளர்ந்ததே பின் நவீனத்துவம்.

மீண்டும் ஒரு எளிய உதாரணம் வழியாக இதைப் புரிந்து கொள்ளலாம்:  ஜாக்கி ஜானின் திரைப்படத்தைப் பார்க்கும் ஒரு பார்வையாளன் படம் முடிந்தவுடன், படம் முடிந்தது என்ற உணர்வை அடைந்து தன் இருக்கையிலிருந்து எழப்போகும் சமயம், “Making of the film”  அவன் முன் விரியும். படப்பிடிப்பில் ஜாக்கி ஜானும் அவர் குழுவும் பட்ட அவஸ்தைகள், வேடிக்கைகள் என அனைத்து இன்பதுன்பங்களும் கோர்வையாக இல்லாமல் முன்பின் சிதறடித்துக் காட்டப்படும் அந்த காட்சிகள் பார்வையாளனுக்கு ஓட்டு மொத்த படமும் காட்டிய சித்திரத்திற்கு இணையான அல்லது அதையும் மீறிய உணர்வெழுச்சியைத் தரும். ஜாக்கி ஜானின் படம் நவீனத்துவம் என்றால் படம் முடிந்தபின் தோன்றும் படப்பிடிப்புக் காட்சித் துணுக்குகள் பின் நவீனத்துவம் என்று சொல்லலாம். இந்த உதாரணங்கள் யாவும் பின் நவீனத்துவத்தை எளிதாக புரிந்து கொள்வதற்காகவேயன்றி அதன் அர்த்தத்தை சுருக்கி எளிமைப்படுத்துவதற்காக அல்ல.

தமிழில் பின் நவீனத்துவம் எண்பதுகளின் இறுதியில் கிட்டத்தட்ட சோவியத் ரஷ்யா உடைந்தபின் பரவலாக வளர்ச்சியடைந்தது. பின் நவீனத்துவ யுகம் மலர்ந்தது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் தமிழவன் மற்றும் நாகார்ச்சுனன் போன்றோர் பின் நவீனத்துவம் பற்றிய அறிமுகத்தை உருவாக்கினர். ஆனால், அவர்களின் பிரதிகள் உண்மையில் பின் நவீனத்துவப் பிரதிகள் அல்ல. பிரேம் ரமேஷின் “முன்னொரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன” போன்ற சிறுகதைத் தொகுப்புகளே பின் நவீனத்துவ பிரதிகளாக அடையாளம் கொள்ளத்தக்கன. பின் நவீனத்துவம் பற்றிய அறிமுகத்தை பிரேம்-ரமேஷ், ஜெயமோகன், எஸ். ராமக்கிருஷ்ணன் முதலிய எழுத்தாளர்களின் கட்டுரைகள், முக்கியமாக எம்.ஜி.சுரேஷ் (பின் நவீனத்துவம் பற்றிய பல்வேறு அறிதல்களை நான் இவரது கட்டுரைகளின் வழி பெற்றேன்), க.பூர்ணசந்திரன் போன்றவர்களின் கட்டுரைகள், அறிமுக வாசகர்களுக்கு இன்றியமையாதவை.



பின் நவீனத்துவப் படைப்புகளின் முக்கிய அம்சங்கள்: முன்பின் மாற்றிச் சொல்லுதல்(Non-Linear – ஜெயமோகனின் “காடு” நாவல்), கட்டுடைத்தல் மற்றும் துண்டாடப்பட்ட அத்தியாயங்கள்  (De-construction and Fragmentation, ஜெயமோகனின் “பின்தொடரும் நிழலின் குரல்),  தெளிவற்ற வடிவம் ( Obscure layout – கோணங்கியின் “இருள்வ மௌதீகம்”), மீ மொழிபு (Meta fiction – எஸ்.ராமகிருஷ்ணனின் “உபபாண்டவம்”), அதிகதை மற்றும் மாய யதார்த்தம் (Modern Fables and Magical realism – எஸ்.ராமகிருஷ்ணனின் “வெயிலைக் கொண்டு வாருங்கள்”) , விரிவாகச் சொல்லுதல் ( Maximalism – ஜெயமோகன் - வெண்முரசு).

நவீனத்துவத்தின் எல்லைகள் மற்றும் போதாமை காரணமாக அதனிலிருந்து முளைத்த மற்றொரு கூறே பின் நவீனத்துவம். உதாரணமாக, நவீனத்துவத்தின் முக்கிய அம்சமான “மையப்படுத்துதல்” என்பது அதிகாரத்தின் முகமாக ஒரு கட்டத்தில் மாறத் துவங்குகிறது. அதிகாரத்தின் கூர்மையான நகங்களுக்குள் சிக்கிக் கொண்ட விளிம்பு நிலை மக்களின் கதை அங்கே கவனிக்கப்படாமல் ஆகிறது. பின் நவீனத்துவம் இந்த மக்களைத் தத்தெடுத்துக் கொள்கிறது. இவர்களின் குரலைத் தங்கள் படைப்புகளாக ஆக்குகிறது.

நவீனத்துவத்தின் மற்றொரு அம்சமான “தொழில் வளர்ச்சி” மற்றும் “தொழிற் புரட்சி” என்பது ஒரு கட்டத்தில் ஒரு தேசம் இன்னொரு தேசத்தை விழுங்குவதற்கான முகாந்திரமாக மாறி முடிவில் இரண்டு உலகப்போர்களை உருவாக்கியது (தொழிற் வளர்ச்சியை இதற்கு முழுமுதற் காரணமாக சொல்வது விவாதத்திற்குரியது என்றாலும் போருக்கான மூல காரணிகளில் இது முக்கியமானது) .இந்த இடத்தில் தொழில் வளர்ச்சி என்பதன் பின்விளைவுகள் அதன் சாதகத்தோடு பாதகங்களையும் கொண்டு வந்திருப்பதின் அபத்தங்களை பின் நவீனத்துவம் குறித்துக் கொள்கிறது.

அதேபோல “மருத்துவம்” என்ற நவீனத்துவ அம்சம், பணம் வைத்திருப்பவர்களுக்காக மட்டுமே என்று மாறிப்போன ஒரு அபத்தநிலையையும் பின் நவீனத்துவம் ஒரு சங்கடமான புன்னகையுடன் குறித்துக் கொள்கிறது.

நவீனத்துவம் பெரிதும் சிலாகித்த ஜனநாயகம், சுதந்திரம், சோஷலிசம் போன்ற கருதுகோள்கள் தற்காலத்தில் எவ்வாறு பொருளிழந்து போய்விட்டன என்பதையும் பின் நவீனத்துவம் தன் படைப்புகளின் மையமாக ஆக்குகிறது. உடைந்த ரஷ்யாவுடன் தானும் கிட்டத்தட்ட காலாவதியாகி விட்ட சோஷலிசத்தின் மீதான ஆழ்ந்த அவநம்பிக்கையும், ஜனநாயகம் என்பது சுதந்திர தினத்தில் மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கப்படும் ஒரு தேய்வழக்காக (Cliche) மாறிப் போனதின் நிதர்சனமும் (உதாரணம்: ராஜீவ் காந்தியுடன் செத்துப் போன எத்தனையோ பொதுமக்களும், போலீஸ்காரர்களும் இன்றும் ஏன் அஞ்சலிக்குரியவர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை?  சுதந்திர போராட்டத் தியாகிகள் எல்லாம் செல்லாக் காசுகளாக கருதபடுவதன் காரணம் என்ன? வ.உ.சியின் வாரிசுகள் இன்றும் ஏன் வறுமையின் உச்சத்தில் இருக்கிறார்கள்? மாறி மாறி வந்த சுதந்திர அரசுகள் ஏன் அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. மாறாக வ.உ.சியின் சிலைக்கு மட்டும் ஆடம்பரமான மாலைகளும், மேடைப் பேச்சுகளும் இத்யாதி இத்யாதிகளும்.. ராணுவ வீரர்களின் புல்லட் ப்ரூப்களின் உள்ள ஓட்டைகள் உண்மையில் ஜனநாயகத்தின் ஓட்டைகளா? அம்பானிகள் தங்கள் வீடுகளுக்கான மின்கட்டண நிலுவையாக லட்சக்கணக்கான ரூபாய்களைத் தள்ளுபடி செய்து அறிவிக்கும் அரசுகள் சாதாரண குடியானவனின் வீட்டுக்குள் புகுந்து மின்கட்டையைப் பிடுங்கிக் கொள்வது ஏன்? தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளுக்கு சாதாரண பொதுமக்கள் பஸ்நிலையங்களிலும் ரயிலடிகளிலும் சாகும்போது அறிக்கை விடும் அரசுகள், ஐந்து நட்சத்திர தாஜ் ஹோட்டலில் பணக்காரர்கள் சாகும்போது மட்டும் துள்ளிக் குதித்து அதிரடி நடவடிக்கை எடுப்பது ஏன்? ஒரு நடிகன் கொலை செய்தால் மட்டும் ஏன் அனைத்து தரப்பிலும் இருந்து அவனுக்கு ஆதரவு குவிகிறது. ஒரு நாள் கூட சிறைக்குச் செல்லாமல் கூலிங் க்ளாஸ் அணிந்து கொண்டு படு டீசன்ட்டாக வெளியே வருகிறான். நடைமுறையில் ஒரு படைப்பாளி இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஜனநாயகம், சுதந்திரம். மேன்மை போன்ற நவீன வார்த்தைகளின் உண்மையான பெறுமதி என்ன என்று தன் படைப்புகளில் தேடும்போது ஆழ்ந்த அவநம்பிக்கையுடன் அவனை அறியாமல் அவன் பின் நவீனத்துவ சட்டங்களுக்குள் வந்து சேர்கிறான்.     

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் வரும் கோயில் அர்ச்சகரான போத்தி என்பவர், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் தனக்கு சிறுநீர் முட்டும்போது யாரும் அறியாமல் மூலவரின் சிலைக்குப் பின்னே சிறுநீர் கழிக்கும் நிகழ்வைப் பற்றிய பேச்சு வரும்போது போத்தி கேட்கும் கேள்வி: வேறென்ன செய்ய முடியும்? மத பீடங்கள் என்பன எவ்வாறு உடைந்து சிதறுகின்றன என்பதை இந்நாவல் வாசிப்பவர் உணரமுடியும். மதம், பக்தி, ஒழுக்கம் போன்றவைகளின் மேன்மைகள் ஒருபுறம், பக்தர் கூட்டத்தில் மணிக்கணக்கில் சிறுநீர் கூட கழிக்க முடியாத அர்ச்சகரின் பரிதவிப்பு மற்றொருபுறம். இத்தகைய கேள்விகளை எழுப்பிப்பார்த்துக் கொள்வது பின் நவீனப் படைப்புகளின் முக்கிய அம்சமாகும்.

ஒட்டுமொத்தமாக நவீனத்துவப் படைப்புகள்  x பின் நவீனத்துவப் படைப்புகளின் தன்மைகளை இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம்.

நவீனத்துவம்                                    பின் நவீனத்துவம்
உருவம்                                 எதிர் உருவம்
நோக்கம்                                 விளையாட்டு
வடிவம்                                 சந்தர்ப்பவசம்
படிநிலை அமைப்பு                       ஒழுங்கற்ற அமைப்பு
படைப்பு                                 நிகழ்வு
இருத்தல்                                இல்லாதிருத்தல்
மையப்படுத்துதல்                        சிதறடித்தல்
படிப்படியாக வளர்தல்                    முன்பின் அலைதல்
வரிசைக்கிரமமாக கதை சொல்லல்       துண்டாடப்பட்ட விவரணை

இலக்கிய அறிமுக வாசகர்களும், எழுதத் துவங்கும் படைப்பாளிகளும் எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் சுருக்கமாக இந்த கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கின்றன. மேலதிக விவரம் வேண்டுவோர், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளையும், படைப்பாளிகளையும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.


 - கணேஷ் பாபு​ ​

வெள்ளி, 10 மே, 2013

01-மே-2013: கருமந்துறை - சேலம்


​சேலம் அருகே கல்வராயன் மலைப் பகுதியில் கருமந்துறையில் செயல்படுகிறது வனவாசி சேவா கேந்திரம். மலை வாழ் மக்களுக்கான முன்னேற்றப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறது இவ்வமைப்பு. தமிழ் நாடு முழுக்கவும் நீலகிரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், சேலம், கள்ளகுறிச்சி இப்படி மலைப்பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வமைப்பு செயல்படுகிறது. வருட இறுதியில் இவ்வெல்லாப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து 5 நாள் முகமை நடத்துகிறார்கள். இம்முறை ஏப்ரல் 30 முதல் மே 4 வரை. 

எங்களுக்கு மே 1 விடுமுறை. YFS-இலிருந்து 7 பேர் இம்முகாமிற்குச் சென்று வரத் தயாரானோம். முதலில் டெம்போ டிராவெலர் வைத்துக் கொண்டு செல்லலாம் என்று யோசித்து பிறகு பேருந்திலேயே செல்வதென்று முடிவாயிற்று. பாலா, அமித், பிரியா, தாமோதரன், தினேஷ், பிரதீப் மற்றும் நான். அமித்துடன் பணிபுரியும் கணேஷ் என்பில்ட் எடுத்துக் கொண்டு தனியாகவே பயணம் செய்து சேலம் வந்திருந்தார். தினேஷ் பெருங்களத்தூரில் ஏறக் காத்திருந்தார். மற்ற எல்லோரும் குறித்த நேரத்திற்கு வந்துவிட்டோம். ஆனால், பேருந்து கிளம்பத் தாமதமாயிற்று. பேருந்தின் பொறுப்பாளர்கள், 5 நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வந்து அந்த 6 டிக்கெட் நீங்க தானே என்பதும், இன்னும் எத்தனை பேரு வரணும், எங்கே ஏறுகிறார் என்பதும் மாறாத கேள்விகளாயிற்று. எங்களில் ஒருவர் தன் இருக்கைவிட்டு, பேசும் வசதிக்காக தற்காலிகமாக காலியாக இருந்த மற்றொரு இருக்கைக்கு வர, பேருந்தின் நடத்துனர்கள் இந்தியா பாகிஸ்தான் இடம் மாறியது போல் பெரிதும் குழம்பிவிட்டார்கள். அவர்களுடைய அப்பாவித்தனமான பதட்டமும், குழப்பமும் ரசிக்கத் தக்கதாக இருந்தது. ஒருவழியாக இரவு மிகத் தாமதமாக கிளம்பிய பேருந்து காலை 6.30 மணிக்கு சேலம், அம்மாபேட்டை சென்றடைந்தது. அமித்தின் நண்பர் முன்பாகவே வந்து காத்திருந்தார். டீக்குப் பிறகு முகாம் நடக்கும் பள்ளியை அடைந்தோம். ஸ்ரீ வித்யா மந்திர். பொறுப்பாளர்களில் ஒருவரான திரு பிரகாஷ் எங்களை வரவேற்றார். சக பொறுப்பாளர்களிடம் எங்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த ஒரு மணியில் பள்ளியிலேயே குளித்துத் தயாரானோம். உண்டி தாயாராக இருந்தது. முகாம் பங்கேற்பாளர்களே பரிமாறினார்கள். உணவு முடித்து சற்று நேரம் பொறுப்பாளர்களுடன் ஓர்  உரையாடல். மலை வாழ் மக்களுக்காக நடை பெற்று வரும் பணிகளை விளக்கினார்கள். மலைப்பகுதி வாழ் குழந்தைகளுக்கான கல்வி இவர்களின் முக்கியமான ஒரு பணி. அதோடு இம்மக்களில் ஒருவரே சுகாதாரத் தன்னார்வலராகப் பயிற்சி கொடுக்கபட்டிருக்கிறார். அவர் மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, முதலுதவியும் செய்கிறார். கவனம் தேவைப்படும் நோய்களை இனம் கண்டு முறையான மருத்துவத்திற்கு அறிவுறுத்துகிறார். இது தவிர, இயற்கை முறை விவசாயத்தில் இம்மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுக்கும், பயிற்சிக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். இப்படிப் பல தளங்களில் ஊக்கத்தோடு செயல்படுகின்றனர் இவ்வமைப்பினர்.



முதலில் கருமந்துறை சென்று வந்து மாலையில் முகாம் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு. ஒரு தவெரா; இரண்டு பேர் என்பில்டில். நல்ல வெயில் தொடங்கி இருந்தது. பயணம் சேலம் - கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் ஒரு 30 கி.மீ கடந்து பின்பு கிளைச் சாலை கருமந்துறை நோக்கிப் பயணிக்கிறது. தரமான சாலைகளாகவே இருந்தது. அதிக ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பகுதி இல்லை. செழிப்பான மலைப்பகுதி தான். இவ்வருட வறுமையிலும் பசுமையோடு இருந்தது. நிறைய தென்னை மரங்கள் மற்றும் மாமரங்கள் எங்கள் கண்களில் பட்டவை; எங்களுக்குப் பரிச்சயமானவையும் அவையே;)



டவெராவில் நான் முன் வரிசையில் இருக்க பின்னால் நண்பர்கள் முடிகுறைந்து அழகூடியிருக்கும் என்தலை வெறுமையைப் படம் பிடித்து விளையாட்டுவம்பு  பண்ணிக் கொண்டிருந்தார்கள். கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு தூங்கிய பிரதீப்பைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கருமந்துறையில் 10-ம் வகுப்பு வரை பள்ளி. தமிழகத்தில் வனவாசி சேவா கேந்திர அமைப்பு முதன் முதலாக  தொடங்கிய பள்ளி. பழமையின் எழில் கொண்டு விளங்கியது. வரவேற்று இளநீரோடு உபசரித்தார்கள்.



இங்கிருந்து நவம்பட்டு சென்றோம். 5-ம் வகுப்பு வரை பள்ளி இங்கே. 



அருகில் திரு.நாதன் அவர்களின் வீடு. கணவனும் மனைவியும் டெல்லியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். நாமக்கல் அருகே மோகனூரைச் சேர்ந்தவர்கள். ஓய்வு வாழ்க்கை இப்பகுதியில். அழகாகத் தன் விருப்பம் போல் தோட்டத்தோடு ஒரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ரசனை கொண்டோர் கனவில் உருவாக்கும் வீடுகளில் ஒன்று. உயர்ந்த ஓட்டுக் கூரைகள். இத்தனை வெயிலுக்கும் தளம் குளுமையாக இருந்தது. நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும். பள்ளியில் ஹிந்தியும், பேசு ஆங்கிலமும் பயிற்றுவிக்கிறார்கள். நாதன் ஒற்றை நாடி மனிதர்; உற்சாகமாகப் பேசக்கூடியவர். நூறு நாள் வேலைத் திட்டத்தினால் விவசாயத்திற்கு ஆட்கள் தட்டுப்பாடு என்றார்.



அறிமுகமாகிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிரியா பொறுமையாக தன் கைபேசியைத் தேடத் தொடங்கினார். கைப்பையில், வீட்டில் எங்கும் இல்லை. சிறு அமைதியின்மை சூழ்ந்தது. எல்லோரும் தேடத் தொடங்கினோம். வாகனம், அதன் பிறகு பள்ளி. கிடைக்கவில்லை. நாதன் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பினோம். செல்லும் வழியில் மீண்டும் ஒரு முறை பள்ளியில் பார்த்து செல்ல எண்ணியிருந்தோம். நானும் பிரதீப்பும் என்பீல்டில். பள்ளியை அடைந்து கதவருகே சென்றதும் முதலில் கண்ணில் பட்டது கைபேசியின் உரைதான். எடுத்தேன். கைபேசி பத்திரமாக உறைக்குள் இருந்தது. நான் கைபேசியை எடுக்கவும், தவெரா வரவும் சரியாக இருந்தது. நண்பர்கள் நான் சதி செய்து மறைத்துவைத்து விட்டதாக வம்பு பண்ணத் தொடங்கினார்கள். ப்ரியவுக்கே கூட சற்று சந்தேகம் .....!!

கைபேசி கிடைத்ததும் பழைய உற்சாகம் திரும்பியது. கருமந்துரைக்கு திரும்ப வேண்டும். பள்ளியில் உணவு தயாராகி இருந்தது. வீட்டுக் காய்கறிகள் கொண்டு சமையல். தனிச் சுவையுடன் இருந்தது. உணவு தயாரித்திருந்த அம்மாவின் அன்பு உபசரிப்பால் நிறையவே உண்டுவிட்டேன். இப்போது சேலம் திரும்ப வேண்டும். 

பிரதீப்பும் நானும் தற்காலிக என்பில்ட் உரிமையாளர்கள்! திரும்பும் வழியில் ஒரு அணையினை படம் பிடிக்கும் முயற்சியில் எந்திரத்தை அணைத்துவிட, திரும்ப உயிர் கொடுப்பதற்குள் திணறிவிட்டோம். புவிஈர்ப்பு விசையிலேயே மூன்று கிமீ போல பயணித்தோம். டி.வி.எஸ் ஒன்றை முந்திக்கொண்டு வேறு எங்கள் வாகனம் சென்றது. அதிக எடை கொண்டதை அதிவேகமாகக் தன்னை நோக்கிக் கவரும் பூமியின் ஆவல். விசை என்பதே ஆசை தானோ  என்னவோ!



சேலம் திரும்பும் வழியில் வாழப்பாடியில் நுங்கு, தேநீர். வாழப்பாடி கடந்து சேலம் - கோயம்பத்தூர் நெடுஞ்சாலையில் பயணம். மரங்கள் மருந்துக்குக் கூட காண முடியாத கொடிய சாலை. நெருப்பை முகர்ந்தது போல் அனல் அடித்தது. அரேபியப் பாலைவனத்துச் சாலையும், இதுவும் ஒன்று விரைந்து செல்ல உதவும் தரத்திலும், பசுமை ஏதுமற்ற அமைப்பிலும். ஒரே பெரிய வித்தியாசம் அங்கே பாலை நிலம் இயற்கையாய் அமைந்தது. இது அக்கறையற்ற பேராசை கொண்ட மனிதன் உருவாக்கியது. 

சேலம் பள்ளியை அடைந்த போது மாலை 5 மணி. தேநீர். பிறகு முகாம் பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து அவர்கள் விளையாட்டுக்களில் கலந்து கொண்டோம். வெகு நாளைக்குப் பிறகு உடற்பயிற்சிக்கான பாரில் பயிற்சி செய்ய முயற்சித்தேன். மூன்றுக்கு மேல் உள்ளிறங்கி மேல் வரக் கடினமாக இருந்தது. விளையாட்டுக்க்குப் பின் சிறு இடைவெளி. அமித்தின் நண்பர் கணேஷ் தண்டர் பெர்ட்-இல் சென்னை திரும்ப வேண்டும். நெடிய பயணம். மாலையே கிளம்பிவிட்டார். இடைவேளைக்குப் பிறகு பக்திப் பாடல்கள், சத் சங்கம். சத் சங்கத்தில் இன்று எங்களில் ஒருவரை நல்ல விஷயம் ஒன்று பகிருமாறு அழைத்தனர். ஒருமித்த குரலாக மகிழ்ச்சியுடன் பிரியாவும், பாலாவும், அமித்தும் என்னைச் சிக்க வைத்தனர். எது வேணுமானாலும் பேசுங்கள் என்று சொல்லிச் சென்றுவிட்டார் பொறுப்பாளர். என்னென்னவோ தலைக்குள் ஓடத் தொடங்கியது. முதலில் உதித்தது பிளாஸ்டிக் உபயோகம் மற்றும் கழிவு மேலாண்மை. ஏனோ அது வேண்டாம் என்று ஒதுக்கினேன். எப்படியோ மனம் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த தளங்களில் வந்து நின்றது. கடினமெனினும் அதையே பகிர்வதென முடிவு செய்தேன். மின்சாரம் இல்லை. முகம் பகுத்தறிய முடியாத வெளிச்சத்திலேயே பேசினேன்.

நம்முடைய நாகரிகமும் பண்பாடும் பல்லாயிர வருடப் பின்னணி கொண்டவை. இத்தனை பெரிய கால வெள்ள ஓட்டத்தில், அனுபவங்கள் மூலம் நம் முன்னோர்கள்  உன்னதமான விஷயங்கள் பலவற்றை நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றின் கூடவே வேண்டாத சில பிணிகளும் வந்து சேர்வது தவிர்க்க முடியாதது. அவற்றைக் கண்டு உணர்ந்து களைந்து முன்னேறுவதே நாம் செய்ய வேண்டியது. மாறாக, நமக்கு வந்து சேர்ந்திருக்கும் ஒட்டு மொத்த பாரம்பரியத்தையும் பழமை, மூடத்தனம் என்று ஒதுக்குவது நம் மீதே நாம் மரியாதை இழப்பதற்குச் சமம். பகவத் கீதையே என்னை விவாதித்து ஏற்றுக் கொள் அல்லது நிராகரி என்றே சொல்கிறது. இத்தகைய நெகிழ்வுத் தன்மை நம் மரபிற்கே உரிய பெரும் சிறப்பு. நம் மரபின் மேல் உள்ள மரியாதையை இழப்பது நம் மீதான மரியாதையை நாமே இழப்பதாகும். கோவில்களும்,  நம் கலைகளும், வழிபாட்டு முறைகளும் நம் மரபின் சின்னங்கள். அவற்றைக் காப்பது நம் கடமை. இவ்வாறமைந்தது என் பேச்சு.



 
இரவுணவு பருப்புத் துவையலோடு ரசம் மற்றும் மோர் சாதம். அருமையான உணவு. என் சிறு வயது வாழ்க்கையை நினைவூட்டுவதாக அமைந்தது. சிறு வயதில், ஊரில் வளவில் திருமணம் (எங்கள் பெரிய வீட்டு வாரிசுகளின் திருமணம்) என்றால் மூன்று நாள் கல்யாண வீடு. முதல் நாள் மாலைப் பலகாரம் முதல் பந்தி. வளவாட்கள் (பங்காளிகள், மாமன் முறை சொந்தங்கள்) கூடுவர். முந்தய நாள் இரவு, திருமண நாளன்று மூன்று வேளை, மறுநாள் (மக்யா நா!) மாலைப் பலகாரத்தோடு விருந்து நிறைவுறும். மூன்று நாள் விருந்தில் திகட்டிப் போன வயிறுக்கு செரிமானம் எளிதாக வேண்டும் இப்போது. அதற்கு அம்மா தயாரிக்கும் உணவு ரசம் சோறும், பருப்புத் துகையலும் ....இங்கே சாப்பிட்ட உணவு இதை நினைவூட்டியது.

இரவுணவுக்குப் பின், மலைப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் பாரம்பரியக் கலைகளின் பகிர்வு. தங்கள் பகுதியில் வழக்கத்திலிருக்கும் நாட்டுப் பாடல்களுக்கு நடனமாடினர் முகாமில் கூடியிருந்தோர். 11 மணிக்கு பேருந்து. எங்களுக்கு நேரமாகிவிட நிகழ்ச்சிக்கிடையில் மிச்சத்தை இழக்க மனமின்றி விடை பெற்றோம். வாசல் வரை வந்து விடை கொடுத்தனர், அமைப்பாளர்கள். மூன்று சக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் செல்லும் அவசரத்தில், தாமுவும், தினேஷும் 'சேலம் செட்' நினைவுபடுத்தினர். என்னது அது என்றோம் ஒருமித்த குரலில். அமித்தும், நானும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா என்ன...பாதி வழியில் சேலம் செட் 'நடமாடும் கடையைக் கண்டு அவசர அவசரமாக வண்டியை நிறுத்தினோம். எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரவில்லை. அருமையாக இருந்தது சேலம் செட். இரண்டு தட்டைகளுக்கு நடுவில் மசாலாவுடன் காரட், வெங்காயத் துருவல். இதுதான் அந்தப் பதார்த்தம். சேலம் வந்து மாம்பழம் வாங்காமல் எப்படி. சந்தையில் நின்றது நல்லதாக ஆயிற்று. அமித் வாங்கி வந்துவிட்டார். 

பேருந்து கிட்டத்தட்ட குறித்த நேரத்திற்கு கிளம்பியது. நல்ல களைப்பு. கிளம்பியதுமே உறங்கிவிட்டேன் போல. அரை மணி கழிந்திருக்கும். பேச்சரவம் கேட்டு விழித்தேன். ஏதோ பிரச்சினை போல் தெரிந்தது. பேருந்தின் கண்ணாடி ஒன்று கல்லெறிந்து சேதமாகியிருந்தது. தன் தலைவனை சிறையில் அடைத்ததற்காக டாஸ்மாக்கில் வேரிமயிர் பொங்க கிளப்பப்பட்ட சிங்கங்கள்! தலைவர், பொது மக்களின் நலன் ஒன்றிற்காக மட்டுமே அவதாரம் எடுத்தவராயிற்றே. பொது மக்களை அவதிக்குள்ளாக்கி, பொது உடமைகளைச் சிதைப்பது தானே நியாயம்! பலவாறு கீறல் விழுந்த கண்ணாடிக்கு அருகே இருந்த இருக்கையில் அம்மாவும் குழந்தையும் அமர்ந்திருந்ததாக நினைவு. கண்ணாடி சிதறவில்லை. ஆபத்து ஒன்றுமில்லை. கீறல் விழுந்த கண்ணாடியை ஓட்டுனரே முழுதும் உடைத்தெடுக்க பயணம் தடைப்படாமல் தொடர்ந்தது.
பிரதீப் 8 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும். பேருந்து 6 மணிக்கெலாம் சென்னைக்குள் வந்துவிட்டது. தாமதம் ஏதும் இல்லாமல் எல்லோரும் வீடு சேர்ந்தோம். பங்கு கொண்ட எல்லோருக்குள்ளும்  ஏதோ ஒரு சிறு அசைவையேனும் ஏற்படுத்திய பயணம். ஒரு நாளின் நேரத்தை அகண்ட கடலென விரித்தெடுத்த பயணம். விரித்தெடுக்கபட்ட நாளின் ஒரு கணம் கூட அலுப்புத் தட்டாத பயணம்! ஒவ்வொரு பயண முடிவிலும் அடுத்த பயணத்திற்கான ஏக்கத்தோடே மனம் விடை பெறுகிறது.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

டிராகன் பொம்மை - கணேஷ் பாபு

டென்னிஸ் லிம் காத்துக் கொண்டிருந்தான். ஆறு மணிக்கு வருவதாக சொல்லியிருந்த ஷெல்லிக்காக. அவளது கைபேசிக்குத் தொடர்பு கொண்டான். அது அணைத்து வைக்கப் பட்டிருந்தது. இரண்டு கைகளாலும் தூக்கச் சிரமமான கனமான கண்ணாடிக் கோப்பை நிறைய காபி குடித்திருந்தான். காபி குடிப்பதே அவனுக்குப் பிடிக்காத பழக்கமாக இருந்தது, ஷெல்லியைக் காதலிப்பதற்கு முன்பு. காபி கோப்பையைக் கொஞ்சம் நகர்த்தி வைத்தான். வாய் கசந்து கொண்டு வந்தது. மூச்சுக் காற்றில் காபியின் மனம் கனத்தது. ஒரு கத்தை டிஸ்யூ தாளை எடுத்து தன் வாயை இறுக்கி மூடி பலமாக ஊதி எடுத்தான். டிஸ்யூ தாளின் நடுவில் காபி நிறம் படிந்திருந்தது.
இருக்கையில் சாய்ந்து கொண்டு, தன்னைச் சுற்றிலும் ஒருமுறை விழிகளைச் சுழல விட்டான். தான் மட்டுமல்ல, இந்தக் கடைக்கு வரும் பெரும்பாலோர் இம்மாதிரியான பெருங்கோப்பையில் தான் காபி குடிக்கிறார்கள். பானை பெற்றெடுத்த குழந்தை போல இவ்வளவு பெரிய கோப்பையில் காபி குடித்த பிறகும் அவர்களுக்கெல்லாம் சாப்பிடுவதற்கு வயிற்றில் இடம் இருக்கிறது. சிறு சிறு குழுக்களாக வருகிறார்கள், அலுவலகம் முடிந்து. ஆளுக்கு ஒரு கோப்பை காபியை மொந்தியவாறு, பேசத் துவங்குகிறார்கள்.அவர்களுக்குரிய உலகத்தில் பேசித் தீர்த்து விட முடியாத கதைகள் எப்போதும் இருக்கின்றன.ஆண்களாய் இருந்தால் பெண்களைப் பற்றி. பெண்களாய் இருந்தால் ஆண்களைப் பற்றி. ஆணும் பெண்ணும் கலந்த குழுவாய் இருந்தால், தங்கள் அலுவலக மேலாளரைப் பற்றி. காற்றைத்தான் வியக்க வேண்டும். மணிக்கணக்காக இவர்கள் பேசும் அர்த்தமற்ற பேச்சொலிகளை ஒருவர் மாற்றி இன்னொருவர் காதுகளுக்கு மலைக்க வைக்கும் பொறுமையுடன் சுமந்து செல்கிறது.
உரையாடலும் காபியும் தீர்ந்த பின் பேசுவதற்குக் கதைகளற்று திகைத்துப் போகிறார்கள். திசை தெரியாத ஆடுகளை மனிதகுமாரன் ஆற்றுப்படுத்துவது போல, அதுவரை அவர்கள் மறந்திருந்த கைபேசி உதவிக்கு வருகிறது. கைபேசி காட்டும் உலகத்தில் சற்று நேரம் அலைந்து திரிகிறார்கள்.மீண்டும் ஒன்றாகப் புறப்பட்டு கிளார்க் கீ அருகேயுள்ள ஏதாவது ஒரு பாரில் பிரவேசிக்கிறார்கள்.
யானைத் துதிக்கையின் விட்டமுள்ள நீண்ட கண்ணாடிக் கோப்பையில் கற்பாந்த காலமாய் அவர்களுக்குக்காக மண்ணுக்குள் புதைந்திருந்த புளித்த மது ஊற்றப் படுகிறது. கோப்பை கொள்ளாது நிரம்பி வழியும் மதுவைக் குடித்த போதையில் மேஜையும் தள்ளாடுகிறது. திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தை தன் தாயைக் கண்டதும் ஆங்காரமாக ஓடிப் போய் இணைந்து கொள்வதைப் போல்,மதுவோடு இணைகிறார்கள். பின் மீண்டும் முடிவற்ற கதைகள் அவர்கள் நாவுகளில் கிளைக்கத் துவங்குகின்றன. அவர்கள் கையில் உள்ள மதுக் கோப்பைகளில் பனிக் கட்டிகளோடு, அந்த இரவும் மூழ்குகிறது.
தானும் ஒரு காலத்தில் தண்ணீரைப் போல மது அருந்தியதும், மது நோய் முற்றி அரைமயக்கமாய் சாங்கி பொது மருத்துவமனையில் படுத்திருந்ததும், தனக்குச் சிகிச்சை அளித்த இந்திய டாக்டர் முகம் சிவந்து, உன் உடம்பில் ஓடுவது ரத்தமல்ல, மது என்று கடிந்து கொண்டதும், அதைக் கேட்டுத் தாத்தா உடல்குலுங்கி அழுததும், இன்னும் நினைவில் இருக்கிறது. அடுப்பில் எரியும் விறகுக் கட்டைகளில் ஒன்றை வெடுக்கெனப் பிடுங்கி வெளியே எறிந்தது போல, ஷெல்லிதானே தன்னை அந்த கொடிய பழக்கத்திலிருந்து காப்பாற்றினாள்! ஷெல்லி! நீதான் எத்தனை பேரன்பு மிக்கவள். இலையின் கூடவே ஓட்டிப் பிறந்த பச்சை நிறம் போல, உன்னோடு சேர்ந்து கருணையும் ஒட்டிப் பிறந்ததோ?
மீண்டும் மணி பார்த்தான். கைக்கடிகாரம் ஏழு மணி காட்டியது. ஷெல்லி இன்னும் வரவில்லை. ஷெல்லிக்காக காத்திருப்பது எப்போதும் போதையூட்டக் கூடியதுதான். ஆனால், சமீப காலமாக ஷெல்லியின் போக்கு விசித்திரமாய் இருக்கிறது. வேண்டுமென்றே தன்னை வெகு நேரம் காக்க வைப்பது போலிருக்கிறது. ஒருவேளை, தன்னை அவளுக்குப் பிடிக்கவில்லையோ. ஒருகணம்தான் இப்படி யோசித்தான். மறுகணம், அப்படி யோசித்ததற்காக வருத்தப்பட்டான். சீ! கேடு கெட்டவனே! இப்படி நினைப்பதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் உனக்கு? சீசரின் மனைவியைப் பற்றி உனக்குத் தெரியாது. ஆனால், ஷெல்லி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளல்லவா! சந்தேகமும் ஷெல்லியும் பகலிரவைப் போல. ஒன்றிருக்கையில் இன்னொன்று இருக்காது. ஷெல்லியைப் பற்றித் தவறாக நினைத்த மனதுக்கு ஒரு ஸ்தூல வடிவு கொடுத்து அதனை மீண்டும் மீண்டும் முல்சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தான். இனி ஒரு முறை ஷெல்லியைப் பற்றி இப்படித் தவறாக நினைப்பதில்லை என்று கண்மூடி தன் தாத்தாவிடம் சத்தியம் செய்து கொடுத்தான். சிறு வயதில் ஷெல்லிக்கும் அவனுக்கும் இடையே எவ்வளவோ சண்டைகள் வந்து போயிருக்கின்றன. அப்போதெல்லாம் தாத்தாதான் இருவருக்கும் சமாதானம் செய்து வைப்பார். இப்போது தாத்தா உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை தனக்கும் ஷெல்லிக்கும் திருமணமே நடந்து முடிந்திருக்கலாம்.
தாத்தாதான் ஷெல்லியைத் தன் வாழ்க்கைக்குள் கொண்டு வந்தவர். அந்தச் சீனப் புத்தாண்டு இன்னும் மூளையின் சுவர்களுக்குள் கோட்டோவியமாகப் பதிந்து போயிருக்கிறது. கடந்த கால நதியினுள் மூழ்கத் துவங்கினான். அப்போது எனக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்தது. சைனா டவுனின் வீதிகளில் என் உயரமுள்ள டிராகன் பொம்மையைத் தூக்கிக் கொண்டு நண்பர்களுடன் வலம் வந்து கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு மலாய் தாத்தா உடனே வீட்டுக்குத் திரும்புமாறு சொன்னார். வீட்டில் எனக்காக ஒரு சிறிய விருந்தாளி காத்திருக்கிறாள் என்று. புதிர்மையைச் சுமந்த கண்களோடு வீட்டுக்கு விரைந்தேன்.
வீட்டின் முன்னறையில் அதுவரைத் தான் தாங்காத ஒரு உயிரினத்தை எங்கள் சோபா தாங்கிக் கொண்டிருந்தது. அழுது கொண்டிருந்த உன்னைத் தாத்தா சமாதானம் செய்து கொண்டிருந்தார். உன் கைகளில் சில சாக்லேட்டுகள் இருந்தன. ஓயாது நீர் பெருக்கும் சுனை போல் உன் கண்கள் நீர் பெருக்கிக் கொண்டிருந்தன. என்னை உன்னிடம் தாத்தா அறிமுகப் படுத்தினார். ஆனால், நீ என் டிராகன் பொம்மையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாய். கை நீட்டி அந்த பொம்மையை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டாய். அதன்பின் நீ அழவேயில்லை. கோடை காலங்களில் காட்டுப் பாறைகளில் நீர் ஓடிய தடம் தெரிவது போல, உன் மஞ்சள் நிற கன்னங்களில் கண்ணீர் ஓவியம் வரைந்து போயிருந்தது.
சீனப் புத்தாண்டு ஊர்வலத்தைக் குடும்பத்துடன் பார்க்க வந்த நீ, எப்படியோ கூட்டத்தில் தொலைந்து போய் தன்னிடம் சிக்கியதாக தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார். டென்னிஸ், நீ இந்தப் பாப்பாவோடு பேசிக் கொண்டிரு. நான் என்னுடைய ஐ.ஸி யை எடுத்து வருகிறேன். அதன்பின் நாம் போலீசுக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்றார்.
டிராகன் பொம்மையை நீ உன் விரல்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாய். இந்த பொம்மை எங்கே வாங்கியது? என்று என்னிடம் கேட்டாய். ஆர்சர்ட் ரோட்டில், என் தாத்தா வாங்கிக் கொடுத்தார் என்று சொன்னேன்.
பொம்மையை அழுத்திப் பிடிக்காதே, அதிலுள்ள பஞ்சு கிழிந்து வெளியே வந்து விடும் என்று நான் சொல்லவும், உன் பிடியைத் தளர்த்திக் கொண்டாய்.
வீட்டின் உள்ளறையிலிருந்து வெளியே வந்த தாத்தா உன்னைத் தூக்கிக் கொண்டார். சைனா டவுன் போலீஸ் நிலையத்தில் நமக்கு முன்பே உன் பெற்றோர் காத்துக் கொண்டிருந்தனர். அழுது வீங்கிய கண்களுடன் இருந்த உன் தாய் ஓடோடி வந்து உன்னை வாங்கிக் கொண்டார். கடல் அலைகளால் மூடப்பட்ட கற்பாறை போல நீ உன் தாயின் நெஞ்சுக்குள் சென்று மறைந்தாய்.
யாவரும் தாத்தாவிற்கு நன்றி சொல்லினர். உன் தந்தையின் உள்ளங்கை என் தாத்தாவின் உள்ளங்கைகளுக்குள் நெடுநேரம் புதைந்திருந்தன. விடைபெறும்போது நீ என் பொம்மையைத் தர மறுத்தாய். நான் அழத் துவங்கியதும், உன் தந்தை அந்த பொம்மையை உன்னிடமிருந்து வாங்கிக் கொடுத்தார். நீ உங்கள் காரில் ஏறிப் புறப்பட்டாய். அந்தக் கரிய இருளில், காரின் பின்புறக் கண்ணாடி வழியே உன் வெள்ளை கவுன் நீண்ட நேரம் என் கண்களுக்குத் தெரிந்து கொண்டே இருந்தது.
அதன் பிறகான எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் எங்கள் வீட்டு சோபா ஆசையுடன் உன்னைத் தாங்கிக் கொண்டது. இன்று வரை அது தொடர்கிறது. காலமாற்றத்தில் எவ்வளவோ நிகழ்ந்தேறிவிட்டன. படிப்பு ஏறாமல், நான் தேங்கி விட்டேன். குழாய் ரிப்பேர் செய்பவனாக. நீயோ இன்று என்.யூ.எஸ்ஸில் ஜெனிடிக் இன்ஜினியரிங் பாட பிரிவில் உதவிப் பேராசிரியை. பூமிக்கும் நிலவுக்கும் இடையே எவ்வளவோ தூரம் இருந்தாலும், நிலவின் ஒளி மட்டும் பூமியைத் தாலாட்டத் தயங்குவதேயில்லை. இடையிடையே, உன்னுடைய உயரம் பார்த்துத் தயங்கி நான் விலகிய போதெல்லாம், நீ உன் மலர்ந்த அன்பினால் என்னை ஒளியூட்டிக் கொண்டல்லவா இருந்தாய். அந்த ஒளியின் விஸ்வரூபத்தை மூன்றாண்டுகளுக்கு முன் உன் காதலை நீ என்னிடம் சொல்லியபோது கண்டேன். கண்கொள்ளாப் பரவசத்தோடு.
இந்த மூன்றாண்டுகளில் எத்தனை கோடி முறை அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் என் மனதில் ஓட்டிப் பார்த்திருப்பேன்? இப்போதும் அது கனவா? நிஜமா? என்ற தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அல்லது ஒரு நுண்ணிய காட்சிப் பிழை என் போதத்தில் ஏறிக் கொண்டு மனமயக்கத்தை ஏற்படுத்துகிறதா? காதலைச் சொல்ல ஏன் புத்தர் கோயிலைத் தேர்ந்தெடுத்தாய் ஷெல்லி? பொன் மாலைப் பொழுது என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். உண்மையில் எத்தனை பேர் தங்கள் வாழ்வில் பொன் மாலைப் பொழுதை தரிசிக்கின்றனர்? நான் தரிசித்தேன். முதல் முறையாக. க்ளெமெண்டி புத்தர் கோயிலில்.
பூன் லே வேயில் க்ளெமெண்டி தீயணைப்பு நிலையத்தின் அருகில் இருக்கிறது அந்தக் கோயில். தாத்தாவுடன் அடிக்கடி அந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம். எத்தனையோ முறை ஷெல்லியும் என்னுடன் வந்திருக்கிறாள். ஆனால், அந்த மாலையில் ஷெல்லிதான் தன் காரில் என்னை அங்கு அழைத்துப் போனாள். அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. மரங்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது. அருகிலுள்ள புல்வெளி ஈரமான காற்றின் இசைக்கேற்ப நடனம் பயின்று கொண்டிருந்தது.
கோயிலின் மேல்தளத்தில் தியானத்தில் அமர்ந்த கோலத்தில் பிரமாண்டமான புத்தர் சிலை. முடிவற்ற யோகத்தில் சுந்தரப் புன்னகை சிந்தும் வதனம். வைத்த கண் வாங்காமல் அதைப் பார்த்துக் கொண்டே சொல்லற்று இருப்பது ஷெல்லியின் வழக்கம். இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே இருப்பது என் வழக்கம். ஒவ்வொரு முறையும் இந்தப் புன்னகை தனக்காக ஒரு செய்தி வைத்திருக்கிறது என்றாள் ஷெல்லி. இந்த புத்தர் சிலையின் புன்னகை என்ன செய்தியைச் சொல்ல முடியும் என்பதே எனக்குப் புரியாததாக இருந்தது. புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவும் இல்லை. அன்னைக்கு மட்டுமே புரியும் குழந்தையின் அங்க அசைவுகள் போல இதுவும் சொல்லில் விளக்க முடியாத விசித்திர உண்மையாக இருக்குமாய் இருக்கும்.
இந்த புன்னகை இந்த முறை என்ன செய்தி சொல்கிறது? என்று கேட்டேன்.
சற்றும் யோசிக்காமல், உன்னைக் காதலிக்கச் சொல்கிறது என்றாள்.
அடுத்த சில நிமிடங்கள் கனத்த மௌனத்தில் சென்று புதைந்தன. எங்களைச் சுற்றி ஆவேசமாக வீசிய ஈரக்காற்றின் ஒலி செவியை நிறைத்தது.
நான் புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தாள். புத்தரும் புன்னகைத்தார். பிரமாண்டமான அவரது உருவத்திற்குப் பின்னே சூரியன் மஞ்சள் ஒளியுடன் எழுந்து வந்தது. ஈர வாடை வீசிய அந்தப் பிரதேசமே மெல்லிய மஞ்சள் ஒளியில் புதிய தோற்றமளித்தது. புற்களின் மேல் தேங்கியிருந்த நீர்த் துளிகள் மாலை ஒளியில் மஞ்சள் பூசியிருந்தன. ஓர் உண்மையான பொன் மாலை நிகழ்ந்து கொண்டிருந்தது.
 ***
கைக்கடிகாரம் எட்டு மணி காட்டியபோது ஷெல்லி அவனை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வெள்ளை நிற டாப்ஸும் கருப்பு நிற கவுனும் அவள் அழகைச் சுமக்க மாட்டாமல் சுமந்து வந்தன. ஷெல்லி இளைத்திருந்தாள். அவள் கூடவே நிழலைப் போல சோர்வு தொற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது.
என்ன ஷெல்லி? ஏன் இவ்வளவு லேட்?
டிராபிக் ஜாம், என்றாள்.
என்ன ஆச்சு உடம்புக்கு. போன வாரம் கூட இப்பிடித்தான் இருந்த. உடம்பு சரியில்லையா. டாக்டர்கிட்ட போகலாமா?
எனக்கு ஒண்ணுமில்லை. கொஞ்சம் அலைச்சல். அதான், என்றாள்.
காபி குடிக்கிறாயா?
வேண்டாம்.
இப்போதெல்லாம் ஏன் போனில் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை?
சற்று நேரம் மௌனமாய் இருந்தாள். கடையின் வாசலில் தொங்கிய 'ஸ்டார்பக்ஸ்' பெயர்ப்பலகையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது அழகிய கன்னங்களையே வெகு நேரம் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். மதகு திறந்த வெள்ளமாய் பேசக் கூடியவள், இன்று ஏன் ஒற்றை வார்த்தையிலேயே பதில் சொல்கிறாள். ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள். அவளாகவே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தான்..
அவர்களுக்கு எதிரே விரிந்திருந்த சாலையில் வாகனங்கள் நெரிசலில் மாட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. அவள் காதுகளைப் பொத்திக் கொண்டாள். வாகன இரைச்சல் அடங்கியதும் மெதுவாக பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு சொல்லும் கத்திரிக்கோல் போல அவன் நெஞ்சைக் கச்சிதமாக அறுத்தெறிந்தது.
டென்னிஸ்! நான் சொல்வதை அமைதியாகக் கேள். பலமுறை யோசித்த பின்தான் இதைச் சொல்கிறேன். எனக்கும் உனக்கும் நட்பு மட்டுமே எப்போதைக்குமான சாத்தியம் போல்த் தெரிகிறது. காதல் சரிவரும் என்று தோன்றவில்லை. சிறு வயதில் நமக்குப் பெரிதாக லட்சியம் என்று ஒன்றும் இருப்பதில்லை. ஆனால், வளர வளர நம்முடைய திசை எது என்று நமக்குப் புலப்பட்டு விடுகிறது. இன்று என் கனவும் லட்சியமும் எல்லாம் என் துறையில் இதுவரை சாத்தியமற்றது என்று ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களிளெல்லாம் என் ஆராய்ச்சி மூலம் வெளிச்சம் பாய்ச்சி புதிய உண்மைகளை இந்த உலகுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதுதான். அதற்கு காதலும் திருமண வாழ்க்கையும் சரிவராது. ஒரு சிறிய வட்டத்தில் என் வாழ்க்கை முடிந்து போவதை ஒருநாளும் நான் விரும்பமாட்டேன்.
தயவு செய்து புரிந்து கொள். நமக்குள் இனி காதலும், கல்யாணமும் வேண்டாம்.
மௌனத் துளிகளால் உண்டான பெரியதொரு அலை அவர்களிருவருக்குமிடையே பொங்கி எழுந்து அடங்கியது.
தன் கால்களுக்குக் கீழிருக்கும் நிலம் நழுவுவது போலிருந்தது டென்னிஸுக்கு. வைத்த கண் வாங்காமல் ஷெல்லியைப் பார்த்துக் கொண்டே இருந்தான் அவன். தொண்டை கனத்து வந்தது. எச்சில் விழுங்குவது சிரமமாக இருந்தது. இந்த நிகழ்வு கனவாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது. கனவுதான் என்று மனதின் இன்னொரு பகுதி அடித்துச் சொன்னது. குரல் உடைந்து விடக்கூடாது என்ற கலவரத்தில் மெல்லப் பேசினான் டென்னிஸ்.
ஏன் ஷெல்லி? என்ன ஆகிவிட்டது இன்று? நாடக வசனம் போல் கச்சிதமாக நீ பேசுவதைப் பார்த்தால் மிகுந்த ஒத்திகை செய்திருப்பது போலத் தெரிகிறது. படிப்பைப் போல நடிப்பிலும் நீ கைதேர்ந்தவள்தான். உண்மையைச் சொல். என்னைப் பிடிக்கவில்லையா?
ஷெல்லி பொறுமை இழக்கத் துவங்கினாள். உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. உன்னை விட என் தொழில் எனக்குப் பிடிக்கிறது என்று தான் சொல்கிறேன். உன்னுடன் காதல் வேண்டாம் என்று தான் சொன்னேன். நட்பு வேண்டாம் என்று சொல்லவேயில்லை. நாம் நல்ல நண்பர்களாகவே தொடர முடியும்.
ஷெல்லியின் கண்களில் அபாரமான நாடகத்தனம் மின்னியது போலிருந்தது. இந்த நாடகீயத் தருணம் இதுவரைத் தன் வாழ்வில் எதிர்கொண்ட நிஜங்களை எல்லாம் அழித்துவிடப் பார்க்கிறதே?
எவ்வளவோ கட்டுப்படுத்தியும் முடியாமல் சூடான ஒரு திரவம் அவன் கண்களில் பொங்கியது. தன் உயிரின் மேல் எறியப்படும் கடைசி கல் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக உணர்ந்தான்.
கடைசியாகக் கேட்கிறேன், இதற்கு மட்டும் பதில் சொல். நான் செய்யும் தொழிலும், என் ஏழ்மையும் தான் உனக்குப் பிடிக்கவில்லையா?
ஷெல்லிக்கு ஆத்திரம் பொங்கியது. இப்படியெல்லாம் பேசுவதாக இருந்தால் நான் எழுந்து போய் விடுகிறேன் என்றாள்.
வேண்டாம் ஷெல்லி. இந்த சொற்ப நிமிஷங்களிலாவது என்னுடன் இரு.
ஷெல்லி பொறுமையின்றி தன் இருக்கையில் அசைந்து கொண்டிருந்தாள்.
கண்களை மூடி தன் தாத்தாவை நினைத்தான் டென்னிஸ். வழுக்கைத் தலையுடன் கூடிய ஒடுங்கிய அவரது உருவம் மனதில் தென்பட்டது சிறிது இதமாக இருந்தது. ஒருவேளை, ஷெல்லி ஏதாவது நெருக்கடியில் இருக்கிறாளோ?
திடீரென்று தோன்றிய ஆர்வத்தில் டென்னிஸ் கேட்டான், ஷெல்லி, நாளை காலை புத்தர் கோயிலுக்கு வருகிறாயா? அங்கு வந்து நிதானமாகப் பேசி நாம் நல்ல முடிவெடுக்கலாம்.
முடியாது. நாளைக் காலை நான் நியூயார்க் போகிறேன். முக்கியமான ஒரு ஆராய்ச்சிப் படிப்புக்காக. திரும்புவதற்கு சில வருடங்கள் ஆகலாம். அலட்சியமாய் சொல்லி முடித்தாள் ஷெல்லி.
கடைசி கல் தன் வேலையைச் செய்து முடித்து விட்டது. எல்லாம் கைமீறிப் போய் விட்டது நன்றாகவே தெரிந்தது டென்னிஸுக்கு. ஒரு உறவு மெல்ல மெல்ல உருவாகி வருவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது? அதை உடைத்து விடுவதற்கோ சில வினாடிகளே போதுமானதாகி விடுகிறது.
கலங்கிய கண்கள் அனலாக, டென்னிஸ் கேட்டான். நாளை உன்னை வழியனுப்ப நான் வரலாமா?
ஷெல்லி சிறிது நேரம் தயங்கினாள். பிறகு, ஒத்துக்கொண்டாள். சரியாக நாளைக் காலை பத்து மணிக்கு சாங்கி விமான நிலையம் வந்துவிடு, டெர்மினல் மூன்று.
சொல்லிவிட்டு, ஒரு சிட்டுக் குருவி பறந்து சென்று கிளைகளில் மறைவது போல, ரோட்டில் மறைந்து விட்டாள்.
டென்னிஸுக்கு தன் இதயம் துடிப்பது பேரரவமாய் காதுகளில் கேட்டது. உடலிலுள்ள ரத்தமெல்லாம் மூளைக்குச் சென்று தேன்கூட்டினைப் போல உறைந்து நின்று விட்டது போல் தலை கனத்து வந்தது. மெல்ல எழுந்து அருகிலுள்ள தன் டூல் பாக்ஸைத் தூக்கிக் கொண்டு தஞ்சோங் பாகர் எம்.ஆர்.டி யை நோக்கி நடந்தான். உடம்பே யோசனையாய் மாறி நடந்து கொண்டிருக்கையில், தன் கண் முன் நீண்ட எஸ்கலேட்டர் ஒன்று கறுப்பு அருவியாய் கீழ் நோக்கிப் பாய்ந்தது. அதில் மெல்ல கால் வைத்து நின்று கொண்டான். திடீரென்று திரும்பிப் பார்க்கையில் தன் அருகே ஷெல்லியின் நிழல் தெரிந்தது போல் இருந்தது. சுதாரிப்பதற்குள், எஸ்கலேட்டரில் கால் தடுக்கி விழத் துவங்கியிருந்தான். தரையில் வந்து விழுந்தவனை அங்கு கூடியிருந்தவர்கள் ஓடி வந்து தூக்கினார்கள். அவனது டூல் பாக்ஸ் திறந்து அதிலுள்ள ஸ்பானர்கள், கட்டிங் ப்ளேட் யாவும் திசைக்கொன்றாய் சிதறியிருந்தன.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெல்ல தன்னுடைய டூல்ஸையெல்லாம் சேகரிக்கையில் உதடு விகசித்து நீண்ட கேவல் ஒன்று எழுந்தது. உடைந்து போய் அழுது கொண்டிருந்த அவனைத் தன் தாயின் கைபிடித்து நடந்து சென்ற சிறுமி ஒருத்தி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.  
அன்றிரவு டென்னிஸின் தூக்கத்தில் ராணுவ அணிவகுப்பு போல கனவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. தொலை தூர வெளிச்சத்தின் பின்னணியில் தன் தாத்தாவின் விரல் பிடித்து அந்தச் சிறுவன் சந்தோசமாக சாலையில் நடந்து போகிறான். அவனது இன்னொரு கையில் ஒரு லாலி பாப் மிட்டாய் இருக்கிறது. அவனது உலகில் தன் தாத்தாவையும் மிட்டாயையும் தவிர வேறு எவருமில்லை. அவர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு வெளிர் நீல வெளிச்சம் ஒரு நிழலைப் போல அவர்களின் பின் வந்தபடியிருக்கிறது. அந்த நிழலின் பாடல் சிறுவனின் காதுக்குள் மட்டும் கேட்கிறது. அவன் சந்தோசமாக தலையாட்டிக் கொண்டே செல்கிறான்.
பிறிதொரு கனவில், ஷெல்லியும் அவனும் "புலாவ் உபின்" தீவுக்குச் செல்கிறார்கள். இரண்டாம் நம்பர் பஸ்ஸின் மாடியில் ஜன்னலோரம் அமர்ந்து கொள்கிறார்கள். வழியில் உள்ள சாங்கி சிறை வளாகத்தை ஆவலுடன் அவர்கள் இருவரும் பார்க்கிறார்கள். நீ மட்டும் என் வாழ்வில் வராமல் போயிருந்தால் நான் இங்குதான் இருந்திருப்பேன் என்று டென்னிஸ் சொல்கிறான். ஷெல்லி அவனை முறைத்துப் பார்த்து அவன் கைகளில் வலிக்கக் கிள்ளுகிறாள். அன்றிரவு "புலாவ் உபின்" தீவிலேயே கூடாரம் அமைத்துத் தங்கி விடுகிறார்கள். சிறு சிறு சுள்ளிகளைச் சேகரித்து அவன் தீ மூட்டுகிறான். தீயின் நாவுகளுக்கு மேலே எதிரிலுள்ள கடற்கரை நெளிந்தாடிக் கொண்டிருந்தது. அவர்களின் நீண்ட நிழல்கள் அருகிலுள்ள மரங்களைத் தழுவிக் கொண்டிருந்தன. ஏகாந்தத்தின் கனம் தாளாமல், ஷெல்லி அவனது தோள்களில் புதைந்தாள். எதிரிலுள்ள நெருப்பை விடவும் சூடான ஒரு முத்தத்தை ஷெல்லியின் கழுத்தில் பதித்தான் அவன். முத்தச் சத்தம் ஆகாயத்தை எட்டி விட்டது போலும். ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் புன்சிரிப்புடன் கண்சிமிட்டியது. மற்றொரு கனவில், ஷெல்லியும் அவனும் புத்தர் கோயிலில் மணம் செய்து கொள்கிறார்கள். வானை மறைத்து புத்தர் தன் புன்னகையை அவர்களின் மேல் சிந்த விடுகிறார். அவர்கள் இருவரும் அண்ணாந்து பார்க்கையில் புத்தரின் மிக அருகில் அவனது தாத்தா தெரிகிறார். அதற்கும் மேலே ஒரு வெண்மேகம் மெல்ல வான்வெளியில் நீந்துவது தெரிகிறது. 
***
காலை ஒன்பது மணிக்கே புறப்படத் தயாராயிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஷெல்லி.  அவள் கைபேசியில் ஒரு மாதம் முன்பு தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைப் படித்துக் கொண்டிருந்தாள். எத்தனையோ முறை படித்ததுதான்.
டியர் ஷெல்லி,
கடந்த மாதம் நீங்கள் எங்கள் மார்பகப் புற்றுநோய் மையத்தில் பரிசோதனை செய்த பின் மீண்டும் இங்கு வரவேயில்லை. இந்த நோய் முழுவதாக வளர்வதற்கு முன் நீங்கள் அவசியம் எங்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து விரைந்து வாருங்கள். உங்கள் சிகிச்சை பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் அதற்காகும் செலவுகள் போன்றவை தனியாக இன்னொரு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறோம் .படித்து விட்டு பதில் எழுதவும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்,
லாரா க்ரீன்
மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர்
1275 யார்க் அவென்யூ
நியூ யார்க்  10065 

எக்ஸ்க்யூஸ் மீ மேடம்! விமானம் புறப்பட இருக்கிறது. உங்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்யவும் என்ற விமானப் பணிப்பெண்ணின் குரல் ஷெல்லியைக் கலைத்தது.
தன் கைபேசியை அணைத்துவிட்டு கைப்பைக்குள் போட்டாள். பின், தன் இடக்கை மணிக்கட்டில் கட்டியிருந்த கறுப்பு நிற கைக்கடிகாரத்தையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அது சென்ற வருடம் அவளுடைய பிறந்தநாள் பரிசாக டென்னிஸ் வாங்கிக் கொடுத்தது. பொத்துக் கொண்டு வந்த கண்ணீர்த் திரையைத் தாண்டி அவளால் அந்த கைக்கடிகாரத்தில் மணி பார்க்கவே முடியவில்லை.
***
சரியாக காலை பத்து மணிக்கெல்லாம் சாங்கி விமான நிலையத்தின், டெர்மினல் மூணில் டென்னிஸ் லிம் காத்துக் கொண்டிருந்தான். ஷெல்லிக்காக. அவளது கைபேசிக்குத் தொடர்பு கொண்டான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனுடைய கைகளில் ஷெல்லிக்கு கொடுப்பதற்காக, பழைய டிராகன் பொம்மை ஒன்று இருந்தது.
(முற்றும்)