வெள்ளி, 12 ஏப்ரல், 2013

டிராகன் பொம்மை - கணேஷ் பாபு

டென்னிஸ் லிம் காத்துக் கொண்டிருந்தான். ஆறு மணிக்கு வருவதாக சொல்லியிருந்த ஷெல்லிக்காக. அவளது கைபேசிக்குத் தொடர்பு கொண்டான். அது அணைத்து வைக்கப் பட்டிருந்தது. இரண்டு கைகளாலும் தூக்கச் சிரமமான கனமான கண்ணாடிக் கோப்பை நிறைய காபி குடித்திருந்தான். காபி குடிப்பதே அவனுக்குப் பிடிக்காத பழக்கமாக இருந்தது, ஷெல்லியைக் காதலிப்பதற்கு முன்பு. காபி கோப்பையைக் கொஞ்சம் நகர்த்தி வைத்தான். வாய் கசந்து கொண்டு வந்தது. மூச்சுக் காற்றில் காபியின் மனம் கனத்தது. ஒரு கத்தை டிஸ்யூ தாளை எடுத்து தன் வாயை இறுக்கி மூடி பலமாக ஊதி எடுத்தான். டிஸ்யூ தாளின் நடுவில் காபி நிறம் படிந்திருந்தது.
இருக்கையில் சாய்ந்து கொண்டு, தன்னைச் சுற்றிலும் ஒருமுறை விழிகளைச் சுழல விட்டான். தான் மட்டுமல்ல, இந்தக் கடைக்கு வரும் பெரும்பாலோர் இம்மாதிரியான பெருங்கோப்பையில் தான் காபி குடிக்கிறார்கள். பானை பெற்றெடுத்த குழந்தை போல இவ்வளவு பெரிய கோப்பையில் காபி குடித்த பிறகும் அவர்களுக்கெல்லாம் சாப்பிடுவதற்கு வயிற்றில் இடம் இருக்கிறது. சிறு சிறு குழுக்களாக வருகிறார்கள், அலுவலகம் முடிந்து. ஆளுக்கு ஒரு கோப்பை காபியை மொந்தியவாறு, பேசத் துவங்குகிறார்கள்.அவர்களுக்குரிய உலகத்தில் பேசித் தீர்த்து விட முடியாத கதைகள் எப்போதும் இருக்கின்றன.ஆண்களாய் இருந்தால் பெண்களைப் பற்றி. பெண்களாய் இருந்தால் ஆண்களைப் பற்றி. ஆணும் பெண்ணும் கலந்த குழுவாய் இருந்தால், தங்கள் அலுவலக மேலாளரைப் பற்றி. காற்றைத்தான் வியக்க வேண்டும். மணிக்கணக்காக இவர்கள் பேசும் அர்த்தமற்ற பேச்சொலிகளை ஒருவர் மாற்றி இன்னொருவர் காதுகளுக்கு மலைக்க வைக்கும் பொறுமையுடன் சுமந்து செல்கிறது.
உரையாடலும் காபியும் தீர்ந்த பின் பேசுவதற்குக் கதைகளற்று திகைத்துப் போகிறார்கள். திசை தெரியாத ஆடுகளை மனிதகுமாரன் ஆற்றுப்படுத்துவது போல, அதுவரை அவர்கள் மறந்திருந்த கைபேசி உதவிக்கு வருகிறது. கைபேசி காட்டும் உலகத்தில் சற்று நேரம் அலைந்து திரிகிறார்கள்.மீண்டும் ஒன்றாகப் புறப்பட்டு கிளார்க் கீ அருகேயுள்ள ஏதாவது ஒரு பாரில் பிரவேசிக்கிறார்கள்.
யானைத் துதிக்கையின் விட்டமுள்ள நீண்ட கண்ணாடிக் கோப்பையில் கற்பாந்த காலமாய் அவர்களுக்குக்காக மண்ணுக்குள் புதைந்திருந்த புளித்த மது ஊற்றப் படுகிறது. கோப்பை கொள்ளாது நிரம்பி வழியும் மதுவைக் குடித்த போதையில் மேஜையும் தள்ளாடுகிறது. திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தை தன் தாயைக் கண்டதும் ஆங்காரமாக ஓடிப் போய் இணைந்து கொள்வதைப் போல்,மதுவோடு இணைகிறார்கள். பின் மீண்டும் முடிவற்ற கதைகள் அவர்கள் நாவுகளில் கிளைக்கத் துவங்குகின்றன. அவர்கள் கையில் உள்ள மதுக் கோப்பைகளில் பனிக் கட்டிகளோடு, அந்த இரவும் மூழ்குகிறது.
தானும் ஒரு காலத்தில் தண்ணீரைப் போல மது அருந்தியதும், மது நோய் முற்றி அரைமயக்கமாய் சாங்கி பொது மருத்துவமனையில் படுத்திருந்ததும், தனக்குச் சிகிச்சை அளித்த இந்திய டாக்டர் முகம் சிவந்து, உன் உடம்பில் ஓடுவது ரத்தமல்ல, மது என்று கடிந்து கொண்டதும், அதைக் கேட்டுத் தாத்தா உடல்குலுங்கி அழுததும், இன்னும் நினைவில் இருக்கிறது. அடுப்பில் எரியும் விறகுக் கட்டைகளில் ஒன்றை வெடுக்கெனப் பிடுங்கி வெளியே எறிந்தது போல, ஷெல்லிதானே தன்னை அந்த கொடிய பழக்கத்திலிருந்து காப்பாற்றினாள்! ஷெல்லி! நீதான் எத்தனை பேரன்பு மிக்கவள். இலையின் கூடவே ஓட்டிப் பிறந்த பச்சை நிறம் போல, உன்னோடு சேர்ந்து கருணையும் ஒட்டிப் பிறந்ததோ?
மீண்டும் மணி பார்த்தான். கைக்கடிகாரம் ஏழு மணி காட்டியது. ஷெல்லி இன்னும் வரவில்லை. ஷெல்லிக்காக காத்திருப்பது எப்போதும் போதையூட்டக் கூடியதுதான். ஆனால், சமீப காலமாக ஷெல்லியின் போக்கு விசித்திரமாய் இருக்கிறது. வேண்டுமென்றே தன்னை வெகு நேரம் காக்க வைப்பது போலிருக்கிறது. ஒருவேளை, தன்னை அவளுக்குப் பிடிக்கவில்லையோ. ஒருகணம்தான் இப்படி யோசித்தான். மறுகணம், அப்படி யோசித்ததற்காக வருத்தப்பட்டான். சீ! கேடு கெட்டவனே! இப்படி நினைப்பதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் உனக்கு? சீசரின் மனைவியைப் பற்றி உனக்குத் தெரியாது. ஆனால், ஷெல்லி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளல்லவா! சந்தேகமும் ஷெல்லியும் பகலிரவைப் போல. ஒன்றிருக்கையில் இன்னொன்று இருக்காது. ஷெல்லியைப் பற்றித் தவறாக நினைத்த மனதுக்கு ஒரு ஸ்தூல வடிவு கொடுத்து அதனை மீண்டும் மீண்டும் முல்சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தான். இனி ஒரு முறை ஷெல்லியைப் பற்றி இப்படித் தவறாக நினைப்பதில்லை என்று கண்மூடி தன் தாத்தாவிடம் சத்தியம் செய்து கொடுத்தான். சிறு வயதில் ஷெல்லிக்கும் அவனுக்கும் இடையே எவ்வளவோ சண்டைகள் வந்து போயிருக்கின்றன. அப்போதெல்லாம் தாத்தாதான் இருவருக்கும் சமாதானம் செய்து வைப்பார். இப்போது தாத்தா உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை தனக்கும் ஷெல்லிக்கும் திருமணமே நடந்து முடிந்திருக்கலாம்.
தாத்தாதான் ஷெல்லியைத் தன் வாழ்க்கைக்குள் கொண்டு வந்தவர். அந்தச் சீனப் புத்தாண்டு இன்னும் மூளையின் சுவர்களுக்குள் கோட்டோவியமாகப் பதிந்து போயிருக்கிறது. கடந்த கால நதியினுள் மூழ்கத் துவங்கினான். அப்போது எனக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்தது. சைனா டவுனின் வீதிகளில் என் உயரமுள்ள டிராகன் பொம்மையைத் தூக்கிக் கொண்டு நண்பர்களுடன் வலம் வந்து கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு மலாய் தாத்தா உடனே வீட்டுக்குத் திரும்புமாறு சொன்னார். வீட்டில் எனக்காக ஒரு சிறிய விருந்தாளி காத்திருக்கிறாள் என்று. புதிர்மையைச் சுமந்த கண்களோடு வீட்டுக்கு விரைந்தேன்.
வீட்டின் முன்னறையில் அதுவரைத் தான் தாங்காத ஒரு உயிரினத்தை எங்கள் சோபா தாங்கிக் கொண்டிருந்தது. அழுது கொண்டிருந்த உன்னைத் தாத்தா சமாதானம் செய்து கொண்டிருந்தார். உன் கைகளில் சில சாக்லேட்டுகள் இருந்தன. ஓயாது நீர் பெருக்கும் சுனை போல் உன் கண்கள் நீர் பெருக்கிக் கொண்டிருந்தன. என்னை உன்னிடம் தாத்தா அறிமுகப் படுத்தினார். ஆனால், நீ என் டிராகன் பொம்மையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாய். கை நீட்டி அந்த பொம்மையை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டாய். அதன்பின் நீ அழவேயில்லை. கோடை காலங்களில் காட்டுப் பாறைகளில் நீர் ஓடிய தடம் தெரிவது போல, உன் மஞ்சள் நிற கன்னங்களில் கண்ணீர் ஓவியம் வரைந்து போயிருந்தது.
சீனப் புத்தாண்டு ஊர்வலத்தைக் குடும்பத்துடன் பார்க்க வந்த நீ, எப்படியோ கூட்டத்தில் தொலைந்து போய் தன்னிடம் சிக்கியதாக தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார். டென்னிஸ், நீ இந்தப் பாப்பாவோடு பேசிக் கொண்டிரு. நான் என்னுடைய ஐ.ஸி யை எடுத்து வருகிறேன். அதன்பின் நாம் போலீசுக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்றார்.
டிராகன் பொம்மையை நீ உன் விரல்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாய். இந்த பொம்மை எங்கே வாங்கியது? என்று என்னிடம் கேட்டாய். ஆர்சர்ட் ரோட்டில், என் தாத்தா வாங்கிக் கொடுத்தார் என்று சொன்னேன்.
பொம்மையை அழுத்திப் பிடிக்காதே, அதிலுள்ள பஞ்சு கிழிந்து வெளியே வந்து விடும் என்று நான் சொல்லவும், உன் பிடியைத் தளர்த்திக் கொண்டாய்.
வீட்டின் உள்ளறையிலிருந்து வெளியே வந்த தாத்தா உன்னைத் தூக்கிக் கொண்டார். சைனா டவுன் போலீஸ் நிலையத்தில் நமக்கு முன்பே உன் பெற்றோர் காத்துக் கொண்டிருந்தனர். அழுது வீங்கிய கண்களுடன் இருந்த உன் தாய் ஓடோடி வந்து உன்னை வாங்கிக் கொண்டார். கடல் அலைகளால் மூடப்பட்ட கற்பாறை போல நீ உன் தாயின் நெஞ்சுக்குள் சென்று மறைந்தாய்.
யாவரும் தாத்தாவிற்கு நன்றி சொல்லினர். உன் தந்தையின் உள்ளங்கை என் தாத்தாவின் உள்ளங்கைகளுக்குள் நெடுநேரம் புதைந்திருந்தன. விடைபெறும்போது நீ என் பொம்மையைத் தர மறுத்தாய். நான் அழத் துவங்கியதும், உன் தந்தை அந்த பொம்மையை உன்னிடமிருந்து வாங்கிக் கொடுத்தார். நீ உங்கள் காரில் ஏறிப் புறப்பட்டாய். அந்தக் கரிய இருளில், காரின் பின்புறக் கண்ணாடி வழியே உன் வெள்ளை கவுன் நீண்ட நேரம் என் கண்களுக்குத் தெரிந்து கொண்டே இருந்தது.
அதன் பிறகான எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் எங்கள் வீட்டு சோபா ஆசையுடன் உன்னைத் தாங்கிக் கொண்டது. இன்று வரை அது தொடர்கிறது. காலமாற்றத்தில் எவ்வளவோ நிகழ்ந்தேறிவிட்டன. படிப்பு ஏறாமல், நான் தேங்கி விட்டேன். குழாய் ரிப்பேர் செய்பவனாக. நீயோ இன்று என்.யூ.எஸ்ஸில் ஜெனிடிக் இன்ஜினியரிங் பாட பிரிவில் உதவிப் பேராசிரியை. பூமிக்கும் நிலவுக்கும் இடையே எவ்வளவோ தூரம் இருந்தாலும், நிலவின் ஒளி மட்டும் பூமியைத் தாலாட்டத் தயங்குவதேயில்லை. இடையிடையே, உன்னுடைய உயரம் பார்த்துத் தயங்கி நான் விலகிய போதெல்லாம், நீ உன் மலர்ந்த அன்பினால் என்னை ஒளியூட்டிக் கொண்டல்லவா இருந்தாய். அந்த ஒளியின் விஸ்வரூபத்தை மூன்றாண்டுகளுக்கு முன் உன் காதலை நீ என்னிடம் சொல்லியபோது கண்டேன். கண்கொள்ளாப் பரவசத்தோடு.
இந்த மூன்றாண்டுகளில் எத்தனை கோடி முறை அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் என் மனதில் ஓட்டிப் பார்த்திருப்பேன்? இப்போதும் அது கனவா? நிஜமா? என்ற தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அல்லது ஒரு நுண்ணிய காட்சிப் பிழை என் போதத்தில் ஏறிக் கொண்டு மனமயக்கத்தை ஏற்படுத்துகிறதா? காதலைச் சொல்ல ஏன் புத்தர் கோயிலைத் தேர்ந்தெடுத்தாய் ஷெல்லி? பொன் மாலைப் பொழுது என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். உண்மையில் எத்தனை பேர் தங்கள் வாழ்வில் பொன் மாலைப் பொழுதை தரிசிக்கின்றனர்? நான் தரிசித்தேன். முதல் முறையாக. க்ளெமெண்டி புத்தர் கோயிலில்.
பூன் லே வேயில் க்ளெமெண்டி தீயணைப்பு நிலையத்தின் அருகில் இருக்கிறது அந்தக் கோயில். தாத்தாவுடன் அடிக்கடி அந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம். எத்தனையோ முறை ஷெல்லியும் என்னுடன் வந்திருக்கிறாள். ஆனால், அந்த மாலையில் ஷெல்லிதான் தன் காரில் என்னை அங்கு அழைத்துப் போனாள். அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. மரங்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது. அருகிலுள்ள புல்வெளி ஈரமான காற்றின் இசைக்கேற்ப நடனம் பயின்று கொண்டிருந்தது.
கோயிலின் மேல்தளத்தில் தியானத்தில் அமர்ந்த கோலத்தில் பிரமாண்டமான புத்தர் சிலை. முடிவற்ற யோகத்தில் சுந்தரப் புன்னகை சிந்தும் வதனம். வைத்த கண் வாங்காமல் அதைப் பார்த்துக் கொண்டே சொல்லற்று இருப்பது ஷெல்லியின் வழக்கம். இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே இருப்பது என் வழக்கம். ஒவ்வொரு முறையும் இந்தப் புன்னகை தனக்காக ஒரு செய்தி வைத்திருக்கிறது என்றாள் ஷெல்லி. இந்த புத்தர் சிலையின் புன்னகை என்ன செய்தியைச் சொல்ல முடியும் என்பதே எனக்குப் புரியாததாக இருந்தது. புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவும் இல்லை. அன்னைக்கு மட்டுமே புரியும் குழந்தையின் அங்க அசைவுகள் போல இதுவும் சொல்லில் விளக்க முடியாத விசித்திர உண்மையாக இருக்குமாய் இருக்கும்.
இந்த புன்னகை இந்த முறை என்ன செய்தி சொல்கிறது? என்று கேட்டேன்.
சற்றும் யோசிக்காமல், உன்னைக் காதலிக்கச் சொல்கிறது என்றாள்.
அடுத்த சில நிமிடங்கள் கனத்த மௌனத்தில் சென்று புதைந்தன. எங்களைச் சுற்றி ஆவேசமாக வீசிய ஈரக்காற்றின் ஒலி செவியை நிறைத்தது.
நான் புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தாள். புத்தரும் புன்னகைத்தார். பிரமாண்டமான அவரது உருவத்திற்குப் பின்னே சூரியன் மஞ்சள் ஒளியுடன் எழுந்து வந்தது. ஈர வாடை வீசிய அந்தப் பிரதேசமே மெல்லிய மஞ்சள் ஒளியில் புதிய தோற்றமளித்தது. புற்களின் மேல் தேங்கியிருந்த நீர்த் துளிகள் மாலை ஒளியில் மஞ்சள் பூசியிருந்தன. ஓர் உண்மையான பொன் மாலை நிகழ்ந்து கொண்டிருந்தது.
 ***
கைக்கடிகாரம் எட்டு மணி காட்டியபோது ஷெல்லி அவனை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வெள்ளை நிற டாப்ஸும் கருப்பு நிற கவுனும் அவள் அழகைச் சுமக்க மாட்டாமல் சுமந்து வந்தன. ஷெல்லி இளைத்திருந்தாள். அவள் கூடவே நிழலைப் போல சோர்வு தொற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது.
என்ன ஷெல்லி? ஏன் இவ்வளவு லேட்?
டிராபிக் ஜாம், என்றாள்.
என்ன ஆச்சு உடம்புக்கு. போன வாரம் கூட இப்பிடித்தான் இருந்த. உடம்பு சரியில்லையா. டாக்டர்கிட்ட போகலாமா?
எனக்கு ஒண்ணுமில்லை. கொஞ்சம் அலைச்சல். அதான், என்றாள்.
காபி குடிக்கிறாயா?
வேண்டாம்.
இப்போதெல்லாம் ஏன் போனில் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை?
சற்று நேரம் மௌனமாய் இருந்தாள். கடையின் வாசலில் தொங்கிய 'ஸ்டார்பக்ஸ்' பெயர்ப்பலகையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது அழகிய கன்னங்களையே வெகு நேரம் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். மதகு திறந்த வெள்ளமாய் பேசக் கூடியவள், இன்று ஏன் ஒற்றை வார்த்தையிலேயே பதில் சொல்கிறாள். ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள். அவளாகவே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தான்..
அவர்களுக்கு எதிரே விரிந்திருந்த சாலையில் வாகனங்கள் நெரிசலில் மாட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. அவள் காதுகளைப் பொத்திக் கொண்டாள். வாகன இரைச்சல் அடங்கியதும் மெதுவாக பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு சொல்லும் கத்திரிக்கோல் போல அவன் நெஞ்சைக் கச்சிதமாக அறுத்தெறிந்தது.
டென்னிஸ்! நான் சொல்வதை அமைதியாகக் கேள். பலமுறை யோசித்த பின்தான் இதைச் சொல்கிறேன். எனக்கும் உனக்கும் நட்பு மட்டுமே எப்போதைக்குமான சாத்தியம் போல்த் தெரிகிறது. காதல் சரிவரும் என்று தோன்றவில்லை. சிறு வயதில் நமக்குப் பெரிதாக லட்சியம் என்று ஒன்றும் இருப்பதில்லை. ஆனால், வளர வளர நம்முடைய திசை எது என்று நமக்குப் புலப்பட்டு விடுகிறது. இன்று என் கனவும் லட்சியமும் எல்லாம் என் துறையில் இதுவரை சாத்தியமற்றது என்று ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களிளெல்லாம் என் ஆராய்ச்சி மூலம் வெளிச்சம் பாய்ச்சி புதிய உண்மைகளை இந்த உலகுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதுதான். அதற்கு காதலும் திருமண வாழ்க்கையும் சரிவராது. ஒரு சிறிய வட்டத்தில் என் வாழ்க்கை முடிந்து போவதை ஒருநாளும் நான் விரும்பமாட்டேன்.
தயவு செய்து புரிந்து கொள். நமக்குள் இனி காதலும், கல்யாணமும் வேண்டாம்.
மௌனத் துளிகளால் உண்டான பெரியதொரு அலை அவர்களிருவருக்குமிடையே பொங்கி எழுந்து அடங்கியது.
தன் கால்களுக்குக் கீழிருக்கும் நிலம் நழுவுவது போலிருந்தது டென்னிஸுக்கு. வைத்த கண் வாங்காமல் ஷெல்லியைப் பார்த்துக் கொண்டே இருந்தான் அவன். தொண்டை கனத்து வந்தது. எச்சில் விழுங்குவது சிரமமாக இருந்தது. இந்த நிகழ்வு கனவாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது. கனவுதான் என்று மனதின் இன்னொரு பகுதி அடித்துச் சொன்னது. குரல் உடைந்து விடக்கூடாது என்ற கலவரத்தில் மெல்லப் பேசினான் டென்னிஸ்.
ஏன் ஷெல்லி? என்ன ஆகிவிட்டது இன்று? நாடக வசனம் போல் கச்சிதமாக நீ பேசுவதைப் பார்த்தால் மிகுந்த ஒத்திகை செய்திருப்பது போலத் தெரிகிறது. படிப்பைப் போல நடிப்பிலும் நீ கைதேர்ந்தவள்தான். உண்மையைச் சொல். என்னைப் பிடிக்கவில்லையா?
ஷெல்லி பொறுமை இழக்கத் துவங்கினாள். உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. உன்னை விட என் தொழில் எனக்குப் பிடிக்கிறது என்று தான் சொல்கிறேன். உன்னுடன் காதல் வேண்டாம் என்று தான் சொன்னேன். நட்பு வேண்டாம் என்று சொல்லவேயில்லை. நாம் நல்ல நண்பர்களாகவே தொடர முடியும்.
ஷெல்லியின் கண்களில் அபாரமான நாடகத்தனம் மின்னியது போலிருந்தது. இந்த நாடகீயத் தருணம் இதுவரைத் தன் வாழ்வில் எதிர்கொண்ட நிஜங்களை எல்லாம் அழித்துவிடப் பார்க்கிறதே?
எவ்வளவோ கட்டுப்படுத்தியும் முடியாமல் சூடான ஒரு திரவம் அவன் கண்களில் பொங்கியது. தன் உயிரின் மேல் எறியப்படும் கடைசி கல் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக உணர்ந்தான்.
கடைசியாகக் கேட்கிறேன், இதற்கு மட்டும் பதில் சொல். நான் செய்யும் தொழிலும், என் ஏழ்மையும் தான் உனக்குப் பிடிக்கவில்லையா?
ஷெல்லிக்கு ஆத்திரம் பொங்கியது. இப்படியெல்லாம் பேசுவதாக இருந்தால் நான் எழுந்து போய் விடுகிறேன் என்றாள்.
வேண்டாம் ஷெல்லி. இந்த சொற்ப நிமிஷங்களிலாவது என்னுடன் இரு.
ஷெல்லி பொறுமையின்றி தன் இருக்கையில் அசைந்து கொண்டிருந்தாள்.
கண்களை மூடி தன் தாத்தாவை நினைத்தான் டென்னிஸ். வழுக்கைத் தலையுடன் கூடிய ஒடுங்கிய அவரது உருவம் மனதில் தென்பட்டது சிறிது இதமாக இருந்தது. ஒருவேளை, ஷெல்லி ஏதாவது நெருக்கடியில் இருக்கிறாளோ?
திடீரென்று தோன்றிய ஆர்வத்தில் டென்னிஸ் கேட்டான், ஷெல்லி, நாளை காலை புத்தர் கோயிலுக்கு வருகிறாயா? அங்கு வந்து நிதானமாகப் பேசி நாம் நல்ல முடிவெடுக்கலாம்.
முடியாது. நாளைக் காலை நான் நியூயார்க் போகிறேன். முக்கியமான ஒரு ஆராய்ச்சிப் படிப்புக்காக. திரும்புவதற்கு சில வருடங்கள் ஆகலாம். அலட்சியமாய் சொல்லி முடித்தாள் ஷெல்லி.
கடைசி கல் தன் வேலையைச் செய்து முடித்து விட்டது. எல்லாம் கைமீறிப் போய் விட்டது நன்றாகவே தெரிந்தது டென்னிஸுக்கு. ஒரு உறவு மெல்ல மெல்ல உருவாகி வருவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது? அதை உடைத்து விடுவதற்கோ சில வினாடிகளே போதுமானதாகி விடுகிறது.
கலங்கிய கண்கள் அனலாக, டென்னிஸ் கேட்டான். நாளை உன்னை வழியனுப்ப நான் வரலாமா?
ஷெல்லி சிறிது நேரம் தயங்கினாள். பிறகு, ஒத்துக்கொண்டாள். சரியாக நாளைக் காலை பத்து மணிக்கு சாங்கி விமான நிலையம் வந்துவிடு, டெர்மினல் மூன்று.
சொல்லிவிட்டு, ஒரு சிட்டுக் குருவி பறந்து சென்று கிளைகளில் மறைவது போல, ரோட்டில் மறைந்து விட்டாள்.
டென்னிஸுக்கு தன் இதயம் துடிப்பது பேரரவமாய் காதுகளில் கேட்டது. உடலிலுள்ள ரத்தமெல்லாம் மூளைக்குச் சென்று தேன்கூட்டினைப் போல உறைந்து நின்று விட்டது போல் தலை கனத்து வந்தது. மெல்ல எழுந்து அருகிலுள்ள தன் டூல் பாக்ஸைத் தூக்கிக் கொண்டு தஞ்சோங் பாகர் எம்.ஆர்.டி யை நோக்கி நடந்தான். உடம்பே யோசனையாய் மாறி நடந்து கொண்டிருக்கையில், தன் கண் முன் நீண்ட எஸ்கலேட்டர் ஒன்று கறுப்பு அருவியாய் கீழ் நோக்கிப் பாய்ந்தது. அதில் மெல்ல கால் வைத்து நின்று கொண்டான். திடீரென்று திரும்பிப் பார்க்கையில் தன் அருகே ஷெல்லியின் நிழல் தெரிந்தது போல் இருந்தது. சுதாரிப்பதற்குள், எஸ்கலேட்டரில் கால் தடுக்கி விழத் துவங்கியிருந்தான். தரையில் வந்து விழுந்தவனை அங்கு கூடியிருந்தவர்கள் ஓடி வந்து தூக்கினார்கள். அவனது டூல் பாக்ஸ் திறந்து அதிலுள்ள ஸ்பானர்கள், கட்டிங் ப்ளேட் யாவும் திசைக்கொன்றாய் சிதறியிருந்தன.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெல்ல தன்னுடைய டூல்ஸையெல்லாம் சேகரிக்கையில் உதடு விகசித்து நீண்ட கேவல் ஒன்று எழுந்தது. உடைந்து போய் அழுது கொண்டிருந்த அவனைத் தன் தாயின் கைபிடித்து நடந்து சென்ற சிறுமி ஒருத்தி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.  
அன்றிரவு டென்னிஸின் தூக்கத்தில் ராணுவ அணிவகுப்பு போல கனவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. தொலை தூர வெளிச்சத்தின் பின்னணியில் தன் தாத்தாவின் விரல் பிடித்து அந்தச் சிறுவன் சந்தோசமாக சாலையில் நடந்து போகிறான். அவனது இன்னொரு கையில் ஒரு லாலி பாப் மிட்டாய் இருக்கிறது. அவனது உலகில் தன் தாத்தாவையும் மிட்டாயையும் தவிர வேறு எவருமில்லை. அவர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு வெளிர் நீல வெளிச்சம் ஒரு நிழலைப் போல அவர்களின் பின் வந்தபடியிருக்கிறது. அந்த நிழலின் பாடல் சிறுவனின் காதுக்குள் மட்டும் கேட்கிறது. அவன் சந்தோசமாக தலையாட்டிக் கொண்டே செல்கிறான்.
பிறிதொரு கனவில், ஷெல்லியும் அவனும் "புலாவ் உபின்" தீவுக்குச் செல்கிறார்கள். இரண்டாம் நம்பர் பஸ்ஸின் மாடியில் ஜன்னலோரம் அமர்ந்து கொள்கிறார்கள். வழியில் உள்ள சாங்கி சிறை வளாகத்தை ஆவலுடன் அவர்கள் இருவரும் பார்க்கிறார்கள். நீ மட்டும் என் வாழ்வில் வராமல் போயிருந்தால் நான் இங்குதான் இருந்திருப்பேன் என்று டென்னிஸ் சொல்கிறான். ஷெல்லி அவனை முறைத்துப் பார்த்து அவன் கைகளில் வலிக்கக் கிள்ளுகிறாள். அன்றிரவு "புலாவ் உபின்" தீவிலேயே கூடாரம் அமைத்துத் தங்கி விடுகிறார்கள். சிறு சிறு சுள்ளிகளைச் சேகரித்து அவன் தீ மூட்டுகிறான். தீயின் நாவுகளுக்கு மேலே எதிரிலுள்ள கடற்கரை நெளிந்தாடிக் கொண்டிருந்தது. அவர்களின் நீண்ட நிழல்கள் அருகிலுள்ள மரங்களைத் தழுவிக் கொண்டிருந்தன. ஏகாந்தத்தின் கனம் தாளாமல், ஷெல்லி அவனது தோள்களில் புதைந்தாள். எதிரிலுள்ள நெருப்பை விடவும் சூடான ஒரு முத்தத்தை ஷெல்லியின் கழுத்தில் பதித்தான் அவன். முத்தச் சத்தம் ஆகாயத்தை எட்டி விட்டது போலும். ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் புன்சிரிப்புடன் கண்சிமிட்டியது. மற்றொரு கனவில், ஷெல்லியும் அவனும் புத்தர் கோயிலில் மணம் செய்து கொள்கிறார்கள். வானை மறைத்து புத்தர் தன் புன்னகையை அவர்களின் மேல் சிந்த விடுகிறார். அவர்கள் இருவரும் அண்ணாந்து பார்க்கையில் புத்தரின் மிக அருகில் அவனது தாத்தா தெரிகிறார். அதற்கும் மேலே ஒரு வெண்மேகம் மெல்ல வான்வெளியில் நீந்துவது தெரிகிறது. 
***
காலை ஒன்பது மணிக்கே புறப்படத் தயாராயிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஷெல்லி.  அவள் கைபேசியில் ஒரு மாதம் முன்பு தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைப் படித்துக் கொண்டிருந்தாள். எத்தனையோ முறை படித்ததுதான்.
டியர் ஷெல்லி,
கடந்த மாதம் நீங்கள் எங்கள் மார்பகப் புற்றுநோய் மையத்தில் பரிசோதனை செய்த பின் மீண்டும் இங்கு வரவேயில்லை. இந்த நோய் முழுவதாக வளர்வதற்கு முன் நீங்கள் அவசியம் எங்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து விரைந்து வாருங்கள். உங்கள் சிகிச்சை பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் அதற்காகும் செலவுகள் போன்றவை தனியாக இன்னொரு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறோம் .படித்து விட்டு பதில் எழுதவும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்,
லாரா க்ரீன்
மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர்
1275 யார்க் அவென்யூ
நியூ யார்க்  10065 

எக்ஸ்க்யூஸ் மீ மேடம்! விமானம் புறப்பட இருக்கிறது. உங்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்யவும் என்ற விமானப் பணிப்பெண்ணின் குரல் ஷெல்லியைக் கலைத்தது.
தன் கைபேசியை அணைத்துவிட்டு கைப்பைக்குள் போட்டாள். பின், தன் இடக்கை மணிக்கட்டில் கட்டியிருந்த கறுப்பு நிற கைக்கடிகாரத்தையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அது சென்ற வருடம் அவளுடைய பிறந்தநாள் பரிசாக டென்னிஸ் வாங்கிக் கொடுத்தது. பொத்துக் கொண்டு வந்த கண்ணீர்த் திரையைத் தாண்டி அவளால் அந்த கைக்கடிகாரத்தில் மணி பார்க்கவே முடியவில்லை.
***
சரியாக காலை பத்து மணிக்கெல்லாம் சாங்கி விமான நிலையத்தின், டெர்மினல் மூணில் டென்னிஸ் லிம் காத்துக் கொண்டிருந்தான். ஷெல்லிக்காக. அவளது கைபேசிக்குத் தொடர்பு கொண்டான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனுடைய கைகளில் ஷெல்லிக்கு கொடுப்பதற்காக, பழைய டிராகன் பொம்மை ஒன்று இருந்தது.
(முற்றும்)